பதிவு செய்த நாள்
04
ஜூன்
2020
11:06
சென்னை; மத்திய அரசு அனுமதி அளித்துள்ள நிலையில், தமிழகத்தில் வரும், 8ம் தேதி முதல், வழிபாட்டு தலங்கள் திறக்கப்பட வாய்ப்புள்ளது. அதேநேரம், கொரோனா தொற்று பரவல் அதிகமுள்ள சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் மட்டும், கட்டுப்பாடு தளர்த்தப்படாததால், கோவில் திறப்பு தாமதமாகும் என தெரிகிறது. சமய தலைவர்களுடன், நேற்று தலைமை செயலர் ஆலோசனை நடத்திய நிலையில், கோவில் திறப்புக்கான அறிவிப்பை, அரசு விரைவில் வெளியிட உள்ளது. ஊரடங்கு காரணமாக, மார்ச் 25 முதல், வழிபாட்டு தலங்கள் மூடப்பட்டுள்ளன. சில நிபந்தனைகளுடன், வரும், 8ம் தேதி முதல், வழிபாட்டு தலங்களை திறக்க, மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
34 பேர் பங்கேற்பு: அதன்படி தமிழகத்தில், வழிபாடு தலங்களை திறக்கலாமா, திறந்தால் எந்த மாதிரியான விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்பது குறித்து ஆலோசிப்பதற்காக, அனைத்து சமய தலைவர்கள் கூட்டம், நேற்று தலைமை செயலகத்தில் நடந்தது.தலைமை செயலர் சண்முகம் தலைமை வகித்தார். கூட்டத்தில், ஹிந்து, கிறிஸ்துவ, முஸ்லிம், ஜெயின், சீக்கிய சமய பிரதிநிதிகள் என, 34 பேர் பங்கேற்றனர்.
ஒவ்வொரு சமய தலைவர்களுடனும், தனித்தனியே தலைமை செயலர் ஆலோசனை நடத்தினார். உள்துறை செயலர் பிரபாகர், டி.ஜி.பி., திரிபாதி, சென்னை போலீஸ் கமிஷனர், ஏ.கே.விஸ்வநாதன் மற்றும் அதிகாரிகளும் கூட்டத்தில் பங்கேற்றனர்.கூட்டத்தில் பங்கேற்றவர்களில் பெரும்பாலானோர், கொரோனா தொற்று அதிகம் உள்ள மாவட்டங்கள் தவிர்த்து, பிற மாவட்டங்களில், 8ம் தேதி முதல், வழிபாட்டு தலங்களை திறக்கலாம் என, ஆலோசனை தெரிவித்தனர்.
மேலும், அரசு தரப்பில், வழிபாட்டு தலங்களை திறக்க அனுமதி அளித்தால், அங்கு நோய் தொற்று ஏற்படாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும்; அரசு கூறும் விதிமுறைகளை, கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என, தெரிவித்துள்ளனர்.சமய தலைவர்கள் கூறிய கருத்துகள் அடிப்படையில், வழிபாட்டு தலங்களை திறந்தால், பின்பற்ற வேண்டிய விதிமுறைகளை அரசு வகுக்கும். அதன்பின், வழிபாட்டு தலங்கள் திறப்பு தொடர்பான அறிவிப்பை, முதல்வர் வெளியிடுவார். நோய் பரவல் அதிகம் உள்ள, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில், வழிபாட்டு தலங்கள் திறப்பு, தள்ளி வைக்கப்பட வாய்ப்புள்ளது என, அதிகாரிகள் தெரிவித்தனர்.கூட்டம் முடிந்த பின், சமய தலைவர்கள் கூறியதாவது:
இந்திய ஹஜ் அசோசி யேஷன் தலைவர் அபுபக்கர்: நாட்டின் நலன் கருதியும், மக்கள் உயிரின் மதிப்புத் தன்மையை கருதியும், உணர்வுகளுக்கு இடம் கொடுத்து விடாமல், திறம்பட செயல்பட வேண்டும்.வழிபாட்டு தலங்களை திறக்கும் போது, எந்த மாதிரி கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும்; சமூக விலகலை எப்படி கடைப்பிடிக்க வேண்டும் என்பதை தெரிவித்தோம். அதன் அடிப்படையில், அரசு விரைவில் நல்ல முடிவு எடுக்கும்.
ஆற்காடு இளவரசர் முகமது அப்துல் அலி: கொரோனா பரவல் அதிகமாக உள்ளது; அதற்கு மருந்து இல்லை. நாம் தான் பொறுப்புணர்வோடு நடந்து கொள்ள வேண்டும்.எனவே, வழிபாட்டு தலங்கள் திறக்கப்படுவதை, குறைந்தது ஒரு மாதமாவது தள்ளி வைக்க வேண்டும்.சென்னையில், கொரோனா வேகமாக பரவி வருகிறது. மசூதிகளை திறந்தால், அனைவரும் தொழுகைக்கு வருவர். இது நோய் பரவலை அதிகரிக்க வழிவகுக்கும். எனவே, ஒரு மாதத்திற்கு பின், நிலைமைக்கு ஏற்ப, வழிபாட்டு தலங்களை திறக்கலாம் என்று தெரிவித்தேன்.
அமைதி கிடைக்கும்: உத்தண்டி சித்தானந்தா ஆஸ்ரம ஒருங்கிணைப்பாளர் சுவாமி ஈஸ்வரானந்தா: வழிபாட்டு தலங்களை திறக்க வேண்டும் என, மக்கள் விரும்புகின்றனர். கோவிலுக்கு சென்றால், அமைதி கிடைக்கும் என, நம்புகின்றனர். கோவிலை திறந்தால், தற்காலிகமாக பிரதோஷ பூஜை, ஊர்வலம், பஜனை, கூட்டம் போன்றவற்றுக்கு, அனுமதி அளிக்கக் கூடாது. தரிசனத்திற்கு மட்டும் அனுமதிக்கலாம்; தரிசனம் முடித்ததும் வெளியில் செல்லும் வகையில், ஏற்பாடு செய்ய வேண்டும். முக கவசம் அணிய வேண்டும். ஆன்லைனில் முன்பதிவு செய்த, 100 பேரை மட்டும் அனுமதிக்க வேண்டும் என, வலியுறுத்தினேன். சிலர் பிரசாதம் வழங்கக் கூடாது என்றனர். இவ்வாறு, அவர்கள் கூறினர்.