முல்லாவின் வீட்டிற்கு அருகில் செல்வந்தர் ஒருவர் இருந்தார். அவரிடம் ஏராளமான பணம், சொத்து இருந்தும் மகிழ்ச்சி சிறிதும் இல்லை. முல்லாவிடம், ‘‘ மனதில் மகிழ்ச்சி இல்லை. எப்போதும் கவலையாக இருக்கிறேன். எனக்கு நல்வழி காட்டுங்கள்” எனக் கேட்டார். பெட்டி ஒன்றில் பணத்தையெல்லாம் சிறு மூட்டைகளாகக் கட்டி வைத்திருந்தார் செல்வந்தர். சந்தர்ப்பம் கிடைக்கும் போது அந்தப் பைகளை சரிபார்த்து வைப்பார். முல்லா அடிக்கடி பொழுது போக்காக அவருடன் பேசுவது வழக்கம். அன்றும் செல்வந்தர் வீட்டுக்கு வந்தார். அப்போது பெட்டியைத் திறந்து பணத்தை சரி பார்த்துக் கொண்டிருந்தார் செல்வந்தர். ‘‘என்ன செய்கிறீர்கள்’’ எனக் கேட்டபடியே செல்வந்தரை நோக்கி வந்தார் முல்லா. முல்லாவைக் கண்ட செல்வந்தர் வேகமாக பெட்டியை பூட்ட முயன்றார் செல்வந்தர். அதற்குள் பாய்ந்து சென்ற முல்லா ஒரு பணப்பையைத் துாக்கிக் கொண்டு வெளியே ஓடினார் முல்லா. ‘‘ஐயோ என் பணப்பை’’ எனக் கத்தியபடியே முல்லாவைப் பின்தொடர்ந்தார் செல்வந்தர். முல்லா இரண்டு தெருக்களைச் சுற்றி விட்டு கடைசியாக செல்வந்தர் வீட்டுக்கே வந்து பணப்பையை வீசினார். செல்வந்தரும் பையை எடுத்துக் கொண்டு ‘‘அப்பாடா! என் பணம்’’ என்றார் மகிழ்ச்சியுடன். பின்னர் ‘‘எதற்காக பணத்தைத் துாக்கிக் கொண்டு ஒடினீர்கள்?. பணம் கிடைக்காவிட்டால் என் உயிரே போயிருக்கும்’’ என்றார் செல்வந்தர். ‘‘இப்பொழுது உங்களுக்கு மகிழ்ச்சி வந்து விட்டதா?” எனக் கேட்டார் முல்லா. ” பறி போன பணம் திரும்பக் கிடைத்தால் மகிழ்ச்சிக்குச் சொல்லவும் வேண்டுமா?” என்றார் செல்வந்தர். ” எதற்காகப் பணத்தை எடுத்துக் கொண்டு ஒடினீர் எனக் கேட்டீரே? உம்மை விட்டுப் போன மகிழ்ச்சி மீண்டும் வர வேண்டும் என்பதற்காகவே.’’ என்றார் முல்லா.