பதிவு செய்த நாள்
16
ஜூலை
2020
01:07
டேராடூன் : கடவுளாக வழிபடப்படும், ராமருடன் தொடர்புடைய தாவரங்கள் மட்டும் உள்ள, பசுமை ராமாயண பூங்காவை, உத்தரகண்ட் வனத்துறை உருவாக்கியுள்ளது.
உத்தரகண்ட் மாநிலத்தில், முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, மாநில வனத்துறை சார்பில், ஹல்த்வானியில், 18 ஏக்கர் பரப்பளவில், பல்லுயிர் பசுமை பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.இதில், மதம் மற்றும் ஆன்மிகம், அறிவியல், ஆரோக்கியம், அழகியல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில், தாவரங்கள் வகைப்படுத்தப் பட்டுள்ளன. மதம் மற்றும் ஆன்மிகம் பிரிவில், பகவான் ராமருடன் தொடர்புடைய தாவரங்கள் வளர்க்கப்பட்டு, ராமாயண பூங்காவாக உருவாக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, மாநில தலைமை வன பாதுகாவலர் சஞ்சீவ் சதுர்வேதி கூறியதாவது: பகவான் ராமருடன் தொடர்புடைய தாவர இனங்களை கண்டறிய, பல்வேறு இலக்கியங்களையும், மத நுால்களையும் ஆராய்ந்தோம். இதில், அனைத்து தகவல்களும், வால்மீகி ராமாயணத்தில் உள்ளன.ராமர், அயோத்தியிலிருந்து இலங்கைக்கு பயணித்த போது, நான்கு வகை வனப்பகுதிகளை கடந்துள்ளார். மற்றொரு வனப்பகுதி சீதையுடனும், இன்னொன்று, ஹனுமானுடனும் தொடர்புடையதாக இருந்தது.இந்த ஆறு வனப்பகுதிகளிலும் இருந்து, 30 வகை தாவரங்களை தேர்வு செய்து, அவற்றின் தாவரவியல் பெயர்களை கண்டறிந்தோம்.
அவற்றை, ஹல்த்வானியில் உள்ள பசுமை ராமாயண பூங்காவில், 1 ஏக்கர் பரப்பில் வளர்த்துள்ளோம். இது, நாட்டின் முதல் பசுமை ராமாயண பூங்காவாக உருவாகியுள்ளது. இங்குள்ள தாவரங்களில், அவற்றின் தாவரவியல் பெயர்களுடன், ராமாயணத்தில் கூறப்பட்டுள்ள சமஸ்கிருத பெயர்களையும், மக்கள் அறியும் வகையில் குறிப்பிட்டுள்ளோம். இவ்வாறு, அவர் கூறினார்.