பதிவு செய்த நாள்
03
ஆக
2020
09:08
உடுமலை அருகே ஜல்லிபட்டியில், ஆடி 18 நாளையொட்டி குழந்தைகளுக்கென ஊஞ்சல் கட்டி விளையாடி மகிழ்ந்தனர். ஆடி மாத விசேஷங்களில் ஊஞ்சல் ஆட்டமும் முக்கிய இடம் பெற்றுள்ளது. இந்த வழக்கத்தை இன்றும் பாரம்பரியமாக பின்பற்றி வருகின்றனர் ஜல்லிபட்டி மக்கள். ஆடி மாத பெருவிழாவின் போது, பெண் குழந்தைகள் உள்ள வீடுகளில், அவர்களின் தாய் மாமன்கள் ஊஞ்சல் கட்டித்தருகின்றனர்.
அந்த ஊஞ்சலை போல உறவும் காலத்துக்கும் நிலைத்து நிற்கும் என்பதே மரபாக பின்பற்றுகின்றனர். இன்று பல்வேறு வகைகளிலும், வண்ணங்களிலும் வீட்டினுள், மொட்டை மாடியில் என எல்லா இடங்களிலும் அமைத்துக் கொள்ளும் ஊஞ்சல்கள் வந்துவிட்டன. இருப்பினும், மரக்கிளையில் கயிறு ஊஞ்சல் கட்டி, இயற்கை காற்றில், நிழலில் விளையாடும் சுகம் இன்றைய குழந்தைகளுக்கு வாய்க்கவில்லை. அப்படி ஒரு வாய்ப்பை தவற விடமால் தொடர்ந்து பின்பற்றுகின்றனர் ஜல்லிபட்டி மக்கள். இங்குள்ள பொம்மையன் கோவிலில், ஆடி 1ம் நாள், கோவிலின் சுற்றுப்பகுதியிலுள்ள மக்கள் முளைப்பாரி வைத்து வழிபடுகின்றனர். கொரோனா பாதிப்பு இருப்பதால் மக்கள் சமூக இடைவெளி விட்டு கோவிலில் வழிபாடு நடத்தினர்.
கோவிலின் முன்புறம், அப்பகுதி மக்கள் சார்பில் மரப்பலகைகள் கொண்டு ஊஞ்சல் கட்டுகின்றனர். பெருக்குக்கு அடுத்தநாள், குழந்தைகள் ஊஞ்சலில் அமர்ந்து விளையாடுகின்றனர்.
பொள்ளாச்சி: பொள்ளாச்சி அமைதிநகரில், வெள்ளையம்மாள், பொம்மியம்மாள் உடனமர் மதுரை வீரன் கோவிலில், ஆடிப்பெருக்கையொட்டி சிறப்பு அபிேஷகம், அலங்கார பூஜைகள் நடைபெற்றன. பொள்ளாச்சி மாகாளியம்மன் கோவில், கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவில், மாரியம்மன் கோவில் மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. ஊரடங்கு காரணமாக பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. அம்பராம்பாளையம் ஆறு மற்றும் நீர் நிலைகளில், வழிபாடு செய்தனர். வீட்டில் இருந்து தயார் செய்து கொண்டு வரப்பட்ட கலப்பு சாதங்களை, குடும்பத்துடனும், நண்பர்களுடனும் சேர்ந்து சாப்பிட்டு மகிழ்ந்தனர். பெண்கள் ஆற்றங்கரையில், பசு சாணத்தால் மெழுகி அதன் மேல் வாழை இலையை விரித்து, பிள்ளையார் சிலை வைத்து அதன் முன் அகல்விளக்கு ஏற்றியும், வெற்றிலை, பாக்கு, பழம் படைத்து, நல்விளைச்சலுக்கு விநாயகரை வழிபட்டனர். இந்தாண்டு ஊரடங்கு காரணமாக குறைந்த அளவு மக்கள் மட்டும் பாரம்பரியத்தை கைவிடாமல் கடைபிடித்து வழிபாடு செய்தனர். முன்னோர்களுக்கு படையல் வைத்தும் பலர் வழிபாடு நடத்தினர்.
வால்பாறை: ஆடிப்பெருக்கையொட்டி வால்பாறை கோவில்களில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. ஆடி மாதம் துவங்கி, 18ம் நாளான நேற்று ஆடிப்பெருக்கு தினமாக கொண்டாடப்படுகிறது. வால்பாறை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், காலை, 8:00 மணிக்கு சிறப்பு அபிேஷக பூஜையும், 9:00 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜையும் நடந்தது. அண்ணாநகர் முத்துமாரியம்மன் கோவிலில், சிறப்பு அபிேஷகபூஜையும், சிறப்பு அலங்கார பூஜையும் நடந்தது. எம்.ஜி.ஆர்., நகர் மாரியம்மன் கோவில், வாழைத்தோட்டம் ஐயப்பசுவாமி கோவில், காமாட்சியம்மன் கோவில், சின்கோனா இரண்டாம் பிரிவு துர்க்கை அம்மன் கோவில், சிறுகுன்றா மாகாளியம்மன்கோவில், ஈட்டியார் மாரியம்மன் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் ஆடிப்பெருக்கு தினமான நேற்று சிறப்பு பூஜைகள் நடந்தன. பக்தர்கள் சமூக இடைவெளிவிட்டு சுவாமியை தரிசித்து சென்றனர். -நிருபர் குழு-