பதிவு செய்த நாள்
07
ஆக
2020
08:08
ஆடி வெள்ளிக்கிழமையான இன்று, பண்ணாரி மாரியம்மனை தரிசிக்க செல்வோமா!பொதுவாக, அம்மன் இடது காலை மடித்து, வலது காலை தொங்க விட்டு அமர்ந்து, அருள்பாலிப்பது வழக்கம். ஆனால், இத்தலத்தில் மாரியம்மன் வலது காலை மடித்து, இடது காலை தொங்க விட்டபடி, சிரித்த முகத்துடன், கைகளில் கத்தி, கபாலம், டமருகம், சூலம் ஏந்தி, அக்னி ஜுவாலையுடன் அமர்ந்த கோலத்தில் அருள் பாலிப்பதால், மிகவும் சக்தி வாய்ந்தவளாக கருதப்படுகிறாள். அத்துடன் இவள் சுயம்பு மூர்த்தியாக, தெற்கு நோக்கி அருள்பாலிப்பது, மிகவும் சிறப்பு.
இக்கோவிலில் தலவிருட்சமாக வேங்கை மரமும், தீர்த்தமாக தெப்பக்கிணறும் அமைந்துள்ளது. இவ்வாறு மூர்த்தி, தலம், தீர்த்தம் என, மூன்று அம்சங்களும் அமையப்பெற்ற இத்தலத்தில், விபூதிக்கு பதிலாக, புற்று மண் பிரசாதமாக தரப்படுகிறது.
இது, தமிழகம் தவிர, கர்நாடக மாநில மக்களிடையேயும் பெரிய அளவில் புகழ் பெற்ற தலமாகும். பல நுாறு ஆண்டுகளுக்கு முன், இச்சுற்று வட்டார மக்கள் ஆடு, மாடுகளை மேய்க்க இந்த வனப்பகுதிக்கு வருவது வழக்கம். ஒருநாள் காராம் பசு ஒன்று தினமும், தனியே சென்று, தன் பாலை, ஒரு வேங்கை மரத்தின் அடியில் தன்னிச்சையாக பொழிவதை மேய்ப்பவன் பார்த்து, ஊர் மக்களிடம் தெரிவித்தான். அவர்கள் அந்த இடத்தை சுத்தம் செய்த போது, அங்கு ஒரு புற்றும், அதனருகில் சுயம்பு லிங்கத் திருவுருவமும் இருப்பதைக் கண்டு, குடில் அமைத்து வழிபட துவங்கினர். காலப்போக்கில், அம்மனின் அருள் பரவத் துவங்கி, தற்போது மிகப் பெரிய புகழ் பெற்ற கோவிலாக திகழ்கிறது.
இங்கு நடைபெறும் பங்குனி குண்டம் பெருந்திருவிழா, தமிழகத்தில் மிகப்புகழ் பெற்றது. 8 அடி நீளம் கொண்ட, மிகப்பெரிய பிரமாண்டமான அக்னி குண்டத்தில், தலைமை பூசாரி இறங்கி, நடந்து செல்வார். பின், லட்சக்கணக்கான பக்தர்கள் அக்னி குண்டம் இறங்குவது, மெய்சிலிர்க்கும் காட்சி.
இத்திருவிழாவில், ஐந்து லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் கலந்து கொள்வர்.ஆடி, வெள்ளி, தை வெள்ளி, அமாவாசை உள்ளிட்ட விசேஷ தினங்களில், கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். மேலும் தீபாவளி, பொங்கல், தமிழ், ஆங்கில வருடப்பிறப்பின் போதும், இக்கோவிலில் பெருந்திரளான பக்தர்கள் வருகை தருகின்றனர். கண்பார்வை இல்லாதவர்கள், அம்மை நோய் தீர, குழந்தை வரம், வேலை வாய்ப்பு, எதிரி பயம் நீங்குதல் உள்ளிட்ட, முக்கிய வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேறுவதாக பலனடைந்தவர்கள் கூறுகின்றனர்.
அம்மை வந்தவர்கள், இங்கு தரும் வேப்பிலையை வாங்கி சென்று வைத்தால், உடனே குணமடைகின்றனர். இவை தவிர, திருமண பாக்கியம், கை, கால் உறுப்புகள் குறைபாடுள்ளவர்கள், விவசாய செழிப்பு வேண்டுவோர், இத்தலத்தில் வேண்டிக் கொண்டால் பிரார்த்தனை கைகூடுகிறது.பக்தர்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேறியவுடன், கை, கால், கண் உருவத்தகடுகள் வாங்கி, அர்ச்சனை செய்து உண்டியலில் போடுகின்றனர்.
அக்னி குண்டம் இறங்குதல், வேல் எடுத்து சுத்துதல், விளக்கு போடுதல், புடவை சாத்துதல் ஆகியவை தவிர, வழக்கமான அபிஷேக ஆராதனைகள் செய்தல் ஆகியவற்றையும் நேர்த்திக்கடன்களாக செய்கின்றனர். இவை தவிர, கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கியும், நேர்த்திக்கடன் செய்கின்றனர்.முகவரி: அருள்மிகு பண்ணாரி மாரியம்மன் திருக்கோவில், சத்தியமங்கலம்,பண்ணாரி -- 638 451, ஈரோடு மாவட்டம். போன்: 04295-243 289ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்திலிருந்து, 15 கி.மீ., துாரத்தில் இக்கோவில் உள்ளது.