பதிவு செய்த நாள்
30
செப்
2020
02:09
தமிழக கோவில்களில், 1950௦ம் ஆண்டில் இருந்து, காணாமல் போன சிலைகள் குறித்த விபரங்களை தொகுத்து அனுப்பும்படி, அறநிலைய துறை அதிகாரி களுக்கு, அத்துறையின் கமிஷனர் பிரபாகர் உத்தரவிட்டுள்ளார்.
ஹிந்து சமய அறநிலைய துறை கட்டுப்பாட்டின் கீழ், 36 ஆயிரத்து, 600 கோவில்கள், 56 மடங்கள், 57 மடத்துடன் இணைந்த கோவில்கள், 1,721 அறக்கட்டளைகள், 17 சமண கோவில்கள் உள்ளன. தமிழகம் முழுதும் உள்ள கோவில்களில், 4.3 லட்சம் சிலைகள் இருப்பதாக கூறப்படுகிறது. அதில், பழமை வாய்ந்த கற்சிலைகள், ஐம்பொன் சிலைகளும் உண்டு. அவற்றில், முறையான பாதுகாப்பில்லாத, 400க்கும் மேற்பட்ட கோவில்களில் இருந்து, 1,300க்கும் மேற்பட்ட சிலைகள் காணாமல் போனதாக கூறப்படுகிறது.
சிலைகள் மாயமானது குறித்து, காவல் துறையில் அளித்த புகாருக்கு, போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்ற, குற்றச்சாட்டும் எழுந்தது. இதையடுத்து, சிலைகள் கணக்கெடுக்கும் பணி, 2015ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டது. காணாமல் போன சிலைகள், எந்த கோவில்களில் திருடப்பட்டவை என்பதை கண்டுபிடிப்பதில், 2016ல், அறநிலைய துறை கமிஷனராக இருந்த, வீரசண்முகமணி ஈடுபட்டார்.
போலி சிலைகளை வைத்து விட்டு, ஒரிஜினல் சிலைகள் திருடப்பட்டிருக்கலாம் என்ற, சந்தேகம் எழுந்தது. எனவே, கோவில்களில் உள்ள சிலைகளின் உண்மைத் தன்மையை கண்டறியும் முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டன.அதன்பின், சிலை தடுப்பு பிரிவு போலீசார், தீவிர முயற்சியில் ஈடுபட்டனர். அதன் பலனாக பல சிலைகள் கண்டறியப் பட்டன. மேலும், 830 கற்சிலைகள் காணாமல் போனதாகவும், நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப் பட்டது. இந்நிலையில், அறநிலையத்துறை கமிஷனராக பிரபாகர் சமீபத்தில் பொறுப்பேற்றார். அவர், அனைத்து இணை, துணை, உதவிக் கமிஷனர்கள், செயல் அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், கோவில்களில் காணாமல் போன சிலைகளின் விபரங்களை, 1950ம் ஆண்டில் இருந்து தொகுத்து அனுப்புங்கள் என, உத்தரவிட்டுள்ளார்.இதன் வாயிலாக, கோவில்களில் காணாமல் போன சிலைகள் விவகாரம், மீண்டும் துாசி தட்டி எடுக்கப்பட்டுள்ளது.
-- நமது நிருபர் -