திண்டுக்கல் : பழநியின் புண்ணிய நதி எனப்படும் சண்முகநதி சாக்கடை போல் கழிவுநீர் தேங்கி புனிதம் கெட்டு வருகிறது. பழநியில் முருகனுக்கு அடுத்து சிறப்பு பெற்றது சண்முகநதி. பக்தர்கள் இங்கு குளித்தபின் முருகனை தரிசனம் செய்வது ஐதீகம். இந்தநதி மானூர், அக்கரைப்பட்டி, கீரனூர், அலங்கியம் வழியாக காவிரியின் துணை நதியான அமராவதியில் கலக்கிறது. பல கோயில்களில் கும்பாபிேஷகத்திற்கு இங்கிருந்து புனிதநீர் எடுத்துச் செல்வர்.இத்தனை சிறப்பு பெற்ற சண்முகநதி தற்போது பாழாகி வருகிறது. கண்டபடி கழிவுநீர் கலப்பதால் சாக்கடையாக தேங்கி நிற்கிறது. கால்நடைகள் குளிக்கவே பயன்படுகிறது. ஆகாயத்தாமரை படர்ந்து தண்ணீர் இருப்பதே தெரியாத அளவுக்கு பசுமை போர்வையுடன் உள்ளது. கார்த்திகை மாதம் பக்தர்களின் வருகை அதிகமாக இருக்கும். அதற்குள் தகுந்த ஏற்பாடுகளை சம்பந்தப்பட்ட நிர்வாகம் செய்ய வேண்டும்.
துாய்மைப்படுத்த வேண்டும்: ஹிந்து தமிழர் கட்சி யின் ராமரவிக்குமார் கூறியதாவது: கங்கையை போல சண்முகநதியையும் தூய்மைப்படுத்துவது அவசியம். கோயிலுக்கு வரும் பலஆயிரம் பக்தர்கள் சண்முகநதியில் நீராடுவது வழக்கம். இந்நிலையில் அமலச்செடிகள் சூழ்ந்து, கழிவுநீர் கலந்து, அழுக்கு நீராக உள்ளது வேதனை தருகிறது. இதன் கரைகளை அகலப்படுத்தி கழிவு நீர் கலக்காமல் பராமரிக்க வேண்டும், என்றார்.