பதிவு செய்த நாள்
30
அக்
2020
10:10
மனிதர்கள் மிருக குணத்துடன் வாழ்ந்த காலத்தில், அவர்களை நல்வழிப்படுத்துவதற்காக இறைவனால் அனுப்பப்படும் துாதுவர்களாக நபிமார்கள் விளங்கினர். இவர்களில் இருபத்து மூன்றாவதாக பூமிக்கு வந்த ஹஜ்ரத் ஈஸாவுக்கு பிறகு 500 ஆண்டுகளாக எந்த நபியும் பூமிக்கு வரவில்லை. இந்த சமயத்தில் மக்களின் வாழ்க்கை முறை தரம் தாழ்ந்து போனது. குறிப்பாக அரபு நாட்டினரின் வாழ்வில் குடிப்பழக்கம், பெண்சிசு கொலை, சமூக விரோத செயல்கள் ஆக்கிரமித்தன. இதனை சீர்திருத்த பூமிக்கு வந்தவர் நபிகள் நாயகம்.
இவர் கி.பி. 570 ரபியுல் அவ்வல் மாதம் 12ம் தேதி மெக்கா நகரில் அவதரித்தார். பெற்றோர் ஹஜ்ரத் அப்துல்லாஹ், ஹஜ்ரத் அமீனா. இவரது முழுப்பெயர் ஹஜ்ரத் முஹம்மத் முஸ்தபா அஹ்மத் முஸ்தபா ரஸூலே கரீம் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம். இவர் பிறக்கும் முன்பே தந்தையையும், ஆறாம் வயதில் தாயையும் இழந்தார். இதனால் பாட்டனார் ஹஜ்ரத் அப்துல் முத்தலிப், சிறிய தந்தை ஹஜ்ரத் அபுதாலிப் பராமரிப்பில் வளர்ந்தார். இளமையில் செல்வாக்குடனும், நற்குணத்துடனும் திகழ்ந்தார்.
23ம் வயதில் கதீஜாவை திருமணம் செய்தார். 40ம் வயதில் இவரை தனது துாதராக அல்லாஹ் அறிவித்தான். நாயகத்திற்கு 11 மனைவிகள், ஏழு குழந்தைகள் உண்டு.இறைத்துாதராக அறிவிக்கப்பட்டதும், வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்! நான் அவனுடயை துாதனாக இருக்கிறேன் என்றார்.இதைக் கேட்ட மெக்காவாசிகள் அவரை துன்புறுத்தினர். 53 வயது வரை மக்களின் கொடுமையை அனுபவித்தார். இதன் காரணமாக மெக்காவில் இருந்து மதீனாவுக்கு குடிபெயர்ந்தார். இதன் பின் மெக்காவுடன் போர் புரிந்து மக்கள் இஸ்லாமை ஏற்க செய்தார். 63ம் வயதில் கி.பி. 632 ரபியுல் அவ்வல் மாதம் 12ல் இவ்வுலகை துறந்தார். பிறந்ததும், இறந்ததும் ஒரே நாளில் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நாளை இஸ்லாமியர்கள் மிலாடி நபி என கொண்டாடுகின்றனர்.