பதிவு செய்த நாள்
25
நவ
2020
03:11
சென்னை; அரசு நிபந்தனைகளுக்கு உட்பட்டு, மார்கழி இசை நிகழ்ச்சிகள் நடத்தப்படும் அரங்குகள் மற்றும் சபாக்கள் தயார் செய்யப்பட்டு வருகிறது.கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில், ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் டிசம்பரில், இசை விழாக்கள் நடைபெறுவது வழக்கம்.எனவே, கலாசார கலை நிகழ்ச்சிகளுக்கு, கூடுதல் தளர்வு அறிவிக்க வேண்டும் என, பாரதிய வித்யாபவன் உள்ளிட்ட அமைப்புகள், அரசிடம் கோரிக்கை வைத்தன.சபாக்களின் கோரிக்கையை ஏற்ற தமிழக அரசு, நாளை முதல் கலாசார கலை நிகழ்ச்சிகள் நடத்த, நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியது.அதன்படி, அரங்கில், 50 சதவீதம் பேர் அல்லது 200 பேர் வரை பங்கேற்க வேண்டும்.நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்கள், முக கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் போன்ற அரசின் வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என, அறிவுறுத்தியுள்ளது.
இதைதொடர்ந்து, சபாக்கள், அரங்குகளில், இருக்கைகள் கிருமி நாசினி தெளித்து சுத்தப்படுத்தப்பட்டன.இது குறித்து, பாரதிய வித்யாபவன் இயக்குனர் எல்.ராமசாமி கூறியதாவது:பாரதிய வித்யாபவன் சார்பில் வரும், 28ம் தேதி முதல் டிச., 19ம் தேதி வரை, தினசரி மாலை 6:00 - 8:00 மணி வரை, இசை நிகழ்ச்சிகள் நடக்க உள்ளன.இதில், சுதா ரகுநாதன், திருச்சூர் சகோதரர்கள், ஒ.எஸ்.அருண், சவுமியா போன்ற பிரபல கர்நாடகஇசைக் கலைஞர்கள் பங்கேற்க உள்ளனர்.கீழ்ப்பாக்கம், பவன்ஸ் ராஜாஜி வித்யாஸ்ரம் பள்ளி வளாகத்தில் உள்ள வெளி அரங்கில் நிகழ்ச்சி நடக்க உள்ளது. அரசின் நிபந்தனைகளுக்கு உட்பட்டு, பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவர்.இவ்வாறு, அவர் கூறினார்.மியூசிக் அகாடமி தலைவர் என்.முரளி கூறியதாவது:கொரோனா பரவலை தொடர்ந்து, இரண்டு மாதத்திற்கு முன்பே, மியூசிக் அகாடமியின், 94வது ஆண்டு இசை நிகழ்ச்சியை, இணையதளம் வாயிலாக நடத்த திட்டமிட்டது.டிச., 24 முதல் 31 வரை, எட்டு நாட்கள் மாலை நேரத்தில் கச்சேரி நடக்க உள்ளது. நிகழ்ச்சிகள் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும். சபா உறுப்பினர்கள் வீட்டில் இருந்தே, இணையதளம் வாயிலாக பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.எங்கள் சபாக்களில், 1,500க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர். அரசு அறிவிப்பில் அரங்கில், 200 பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி என, தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களில் யார், யாருக்கு அனுமதி வழங்குவது என்ற சிரமம் ஏற்படும். ஆகவே, இந்த ஆண்டு இசை நிகழ்ச்சியை இணையதளம் வாயிலாக மட்டுமே நடத்துகிறோம்.இவ்வாறு, அவர் கூறினார்.நாரதகான சபா செயலர் ஹரிசங்கர் கூறியதாவது:டிசம்பர் இசை விழாக்களை பொருத்தமட்டில், 13 சபாக்கள் ஒருங்கிணைந்த கூட்டமைப்பு, இணையதளம் வாயிலாக நடத்தும் நிகழ்ச்சி தவிர, வேறு எந்த இசை நிகழ்ச்சியும் திட்டமிடப்படவில்லை.தனியார் நிகழ்ச்சி நடத்த, அரங்குகள் வாடகைக்கு விட தயாராக உள்ளோம். ஆனால், அரசின் நிபந்தனைகளில், 200 மட்டுமே அனுமதி என்பதால், தனியாரும், அரங்கிற்கு வாடகை கொடுப்பது போன்ற சிக்கல்களை எதிர் கொள்வர்.இவ்வாறு, அவர் கூறினார்.