பதிவு செய்த நாள்
04
ஜன
2021
10:01
சபரிமலை: மகரவிளக்கு நாளில், சபரிமலையில் கூடுதல் பக்தர்களுக்கு அனுமதி இல்லை. ஜோதி தரிசனத்துக்காக பக்தர்கள் குடில் அமைத்து தங்க அனுமதி இல்லை, என, தேவசம்போர்டு தலைவர் வாசு கூறினார். கேரளாவில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவிலில், கொரோனா முன் எச்சரிக்கை நடவடிக்கைகள், கட்டுப்பாடுகள் கடுமையாக பின்பற்றப்படுகின்றன. ஆன்லைன் முன்பதிவு மூலம், தற்போது தினமும், 5,000 பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள், 48 மணி நேரத்துக்குள் எடுக்கப்பட்ட கொரோனாவுக்கான ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை, நெகடிவ் சான்றிதழுடன் செல்ல வேண்டும். இந்நிலையில், மகரவிளக்கு நாளில், கூடுதல் பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளதாக தகவல் பரவியது. இதனை திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் வாசு மறுத்துள்ளார். அவர் கூறியதாவது: ஆன்லைனில் ஏற்கனவே முன்பதிவு செய்த, 5,000 பேருக்கு மட்டுமே மகரவிளக்கு நாளில் அனுமதி உண்டு. முன்பதிவுக்கான கூப்பன் இல்லாமல் வரும் பக்தர்கள், நிலக்கல்லில் திருப்பி அனுப்பப்படுவர். ஜோதி தரிசனத்துக்காக குடில்கள் அமைத்து, சன்னிதானத்தில் வசிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.