ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா நிறைவு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04ஜன 2021 11:01
ஸ்ரீரங்கம் : ஸ்ரீரங்கம் ரங்கநாதர் வைகுண்ட ஏகாதசி விழா நம்மாழ்வார் மோட்சத்துடன் நிறைவடைந்தது.
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா டிச.14ம் தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கியது. பகல் பத்து, ராப் பத்து என 21 நாட்கள் நடைபெறும் விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சொர்க்க வாசல் திறப்பு கடந்த டிச.25ம் தேதி நடைபெற்றது. தொடர்ந்து, இன்று (ஜன.4) அதிகாலை 5 மணி முதல் 6 மணி வரை நம்மாழ்வார் மோட்சம் நடைபெற்றது. பின்னர், காலை 6 மணி முதல் 9 மணி வரை பொது ஜன சேவை நடைபெற்றது. நம்பெருமாள் காலை 9.30 மணிக்கு திருமாமணி மண்டபத்தில் இருந்து புறப்பட்டு காலை 10.30 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார். அதன்பிறகு, மூலஸ்தானத்தில் இரவு 8.30 மணி முதல் இரவு 9 மணி வரை இயற்பா பிரபந் தம் தொடங்குகிறது. அதன் தொடர்ச்சியாக இரவு 9 மணி முதல் நாளை (ஜன.5) அதிகாலை 2 மணி வரை சந்தனு மண்டபத்தில் இயற்பா பிரபந்த சேவை நடைபெறுகிறது. அதன்பிறகு, அதிகாலை 4 மணி முதல் அதிகாலை 5 மணி வரை சாற்றுமறை நடைபெறுகிறது. அத்துடன் வைகுண்ட ஏகாதசி பெருவிழா நிறைவடைகிறது.