சிவகங்கை : நாட்டரசன்கோட்டை கண்ணுடைய நாயகி அம்மன் கோயிலில் ஜன.,19 அன்று செவ்வாய் பொங்கல் விழா நடைபெற உள்ளது.
இங்கு ஆண்டுதோறும் தை பிறப்பிற்கு அடுத்து வரும் முதல் செவ்வாய் அன்று கோயில் முன் செவ்வாய் பொங்கல் விழா நடைபெறும். இந்தாண்டு கோயில்களில் சாமி தரிசனம்செய்ய தளர்வுடன் கூடிய ஊரடங்கை அரசு விதித்துள்ளது. அதன்படி ஜன., 19 அன்று செவ்வாய் பொங்கல் விழா நடக்கிறது. அன்றைய தினம் நகரத்தார்கள் குடும்ப தலைவரின் பெயர்களை சீட்டாக எழுதி, வெள்ளி குடத்தில் போட்டு குலுக்கி எடுப்பர். இதில், முதல் பெயர் வருவோரின் குடும்பத்தினர் முதல் பொங்கலை மண்பானையில் வைப்பர்.அதை தொடர்ந்து நகரத்தார் ஏற்பாடு செய்த அடுப்புகளில் பொங்கல் வைத்து வழிபடுவர். பொங்கல் வைபவம் மாலை 5:00 மணிக்கு துவங்கும்.பின்னர் கண்ணுடைய நாயகி அம்மனுக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை நடக்கும். நாட்டரசன்கோட்டையை சேர்ந்த நகரத்தார் வணிகம், வேலை நிமித்தமாக பல்வேறு நாடுகளில் வசித்து வருகின்றனர். அவர்கள் செவ்வாய் பொங்கல் அன்று குடும்பத்தாருடன் கூடி, அம்மனுக்கு பொங்கல் வைத்து நேர்த்தி செலுத்துவர். அன்றைய தினம் வரன்தேடும் படலமும் நடைபெறும்.பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் மாவிளக்கு, பொங்கல் வைத்து வழிபாடு நடத்துவர். சிவகங்கை தேவஸ்தானம் சார்பில் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.