பதிவு செய்த நாள்
27
ஜன
2021
06:01
அன்னூர்: மொண்டிபாளையம், வெங்கடேச பெருமாள் கோவில் தேரோட்டம் நடந்தது.
கோவை மாவட்டம், அன்னூர் அடுத்த மொண்டிபாளையத்தில், பிரசித்தி பெற்ற வெங்கடேச பெருமாள் கோவில் உள்ளது. மேலைத் திருப்பதி என்று அழைக்கப்படும் இந்த கோவிலில் 57ம் ஆண்டு தேர்த்திருவிழா கடந்த 21ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 26ம் தேதி வரை, தினமும் காலையில், சுவாமி திருவீதி உலாவும், இரவு வெவ்வேறு வாகனங்களில் உலாவும் நடந்தது. அதிகாலை 5:15 மணிக்கு, வெங்கடேச பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி சமேதரராக, தேருக்கு எழுந்தருளினார். கொரோனா காரணமாக பக்தர்களை தேருக்குள் அனுமதிப்பது தடை செய்யப்பட்டிருந்தது. மதியம் 12:45 மணிக்கு, கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களை சேர்ந்த பல ஆயிரம் பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர். ஏராளமான பக்தர்கள், கோவிந்தா, கோவிந்தா, என பக்தி கரகோஷம் எழுப்பியபடி, வாழைப்பழம், நிலக்கடலை, எலுமிச்சை ஆகியவற்றை தேரின் மீது எறிந்தனர். மதியம் 3:00 மணிக்கு தேர் நிலையை அடைந்தது. பக்தர்கள் பலர் நீர் மோர் வழங்கினர். வழக்கமாக வழங்கப்படும் அன்னதானம் கொரோனா காரணமாக ரத்து செய்யப்பட்டிருந்தது.