பதிவு செய்த நாள்
27
ஜன
2021
06:01
போடி : தேனி மாவட்டம், சின்னமனுார் பைபாஸ் ரோட்டின் அருகே கி.பி.10ம் நுாற்றாண்டை சார்ந்த தவ்வை சிற்பத்தை போடி சி.பி.ஏ., கல்லுாரி தொல்பொருள் ஆராய்ச்சி பேராசிரியர்கள், மாணவர்கள் கண்டு பிடித்துள்ளனர்.
இக்கல்லுாரியின் முதல்வர் சிவக்குமார் வழிகாட்டுதலின் படி பேராசிரியர் மாணிக்கராஜ் தலைமையில் மாணவர்கள் ராம்குமார், அஜித்குமார், நெல்லுார் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் கருப்பையா ஆகியோர் சின்னமனுார் பகுதியில் கல்வெட்டுகள், கற்கள், மண்ணில் புதைந்துள்ள கற்கால பொருட்களை கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டனர். இதில் கி.பி.10 ம் நுாற்றாண்டின் தவ்வை என்ற மூத்ததேவி சிற்பத்தை கண்டறிந்துள்ளனர். மாணிக்கராஜ் கூறுகையில், பாண்டியர்களின் ஆட்சியில் சின்னமனுார் அழநாட்டு பிரிவில் முக்கியமான ஊராக இருந்துள்ளது.
அரபதசேகர மங்கலம், அரவார் மங்கலம், நற்செய்கைப்புத்துார், மந்திர கௌர மங்கலம், அரிகேசரி நல்லுார், திருப்பூலந்துறை போன்ற பெயர்களில் அழைக்கப்பட்டுள்ளது.தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள தவ்வை சிற்பம் 6 அடி நீளம், 4 அடி உயரமுடைய கல்லில் உள்ளது. தவ்வை தனது பிள்ளைகளான மாந்தன் என்ற கோமுகன், மாந்தி உடன் பீடம் ஒன்றில் சுகாசனம் அமர்வில் அமர்ந்த நிலையில் புடைப்புச் சிற்பமாக வெட்டப்பட்டுள்ளது. இதில் தவ்வையின் தலையும்,வலது கையும் உடைக்கப்பட்ட நிலையிலும் இடது கையை இடது தொடையில் ஊன்றியபடி காணப்படுகிறது. இது கி.பி., 10, 11ம் நுாற்றாண்டைச் சேர்ந்ததாக கருதப்படுகிறது. தேனி மாவட்டத்தில் பழமையான முதல் தவ்வை சிற்பம் இது ஒன்றுதான், என்றார்.