பெண்ணாடத்தில் வசித்த சிவபக்தரான அச்சுதகளப்பாளருக்கு மகப்பேறு இல்லை. தன் குருநாதர் அருள்நந்தி சிவாச்சாரியாரிடரிடம் முறையிட்டார். அவர், நாயன்மார்கள் பாடிய பன்னிருதிருமுறைகள் மீது அபார நம்பிக்கை கொண்டவர். அவர் கயிறு சாத்துதல் என்னும் முறை மூலம் களப்பாளருக்கு குழந்தை பாக்கியம் உண்டா என சோதித்தார். அதாவது, திருமுறை ஏடுகளை சிவன் முன் வைத்து, அதில் கயிறு போட்டு பார்ப்பதாகும் ( நாடி ஜோதிடம் போல) அதில் சம்பந்தரின் திருவெண்காட்டுப்பதிகம் வந்தது. அப்பதிகத்தை தினமும் பாராயணம் செய்ய சீடரிடம் கூறினார். ஆனால், சிவன் களப்பாளரின் கனவில் தோன்றி, நீ என்ன செய்தாலும், உனக்கு புத்திர பாக்கியம் இல்லை என்று கூறிவிட்டார். களப்பாளர் அவரிடம்,சுவாமி! என் ஊழ்வினைப் பயனால் எனக்கு குழந்தை இல்லாமல் போனாலும், தங்கள் அருள்பெற்ற சம்பந்தரின் வாக்கும், நான் இதைப் படிக்க காரணமான என் குருநாதரின் வாக்கும் பொய்யாகலாமா? என்று வருத்தத்துடன் கேட்டார். இந்த நியாயமான கேள்வியில் சிக்கிக் கொண்ட சிவன், அவருக்கு பிள்ளைவரம் அளித்தார். சைவத்துக்கே சாஸ்திரமாக விளங்கும் சிவஞானபோதம் என்னும் அரிய நூலை இயற்றிய மெய்கண்டார் தான் அந்தக் குழந்தை.