சாலமன் ராஜாவின் அரண்மனைக்கு ஒரு வழக்கு வந்தது. ஒரு நெட்டையான பெண், ஒரு குட்டையான பெண்ணும் தங்கள் குழந்தையுடன் அழுதபடியே வந்தனர். மன்னர் முன்னிலையில் குழந்தைகளைக் கிடத்தினர். ஒரு குழந்தை அசைவற்று கிடந்தது. அது இறந்த குழந்தை, இன்னொரு குழந்தை கை, காலை அசைத்தபடி துறுதுறுவென இருந்தது. ராஜா அவர்களிடம் நடந்ததை விசாரித்தார். நெட்டை பெண்,“ மன்னரே! நாங்கள் அடுத்தடுத்த வீடுகளில் குடியிருக்கிறோம். எனக்கு குழந்தை பிறந்த சில நாளிலேயே இவளுக்கும் குழந்தை பிறந்தது. இன்று காலையில் விழித்த போது, என் அருகில் குழந்தை இறந்து கிடந்தது. நான் உற்றுப் பார்த்த போது அது என் குழந்தையல்ல என்பது தெரிந்தது. இறந்து போன அவளது குழந்தையை வைத்து விட்டு, உயிருடன் இருந்த அழகான என் குழந்தையை துாக்கிச் சென்று விட்டாள். அதை தாங்களே மீட்டுத் தர வேண்டும்” என்றாள். குட்டைப் பெண்ணும் இதையே தெரிவித்தாள். வீரன் ஒருவனை அழைத்த சாலமன், ‘‘ இதற்கு ஒரே தீர்வு தான் இருக்கிறது. இறந்த குழந்தையை புதையுங்கள். உயிருள்ள குழந்தையை வெட்டி ஆளுக்கு பாதியாகக் கொடுங்கள்’’ என்றார். குட்டைப் பெண் சம்மதித்தாள். தனக்கு கிடைக்காதது மற்றவருக்கும் கிடைக்கக்கூடாது என்பது அவளது எண்ணம். நெட்டையான பெண்ணோ, “ஐயோ...அப்படி செய்யாதீர்கள். எனக்கு வேண்டாம். யாரிடம் வளர்ந்தாலும் என் குழந்தை உயிருடன் இருக்கட்டும்,” என்று அழுதாள். சாலமன் பளிச்சென தீர்ப்பு சொன்னார். “குட்டைப் பெண்ணே! உன் குழந்தையின் கல்லறைக்குச் சென்று அழு. உன் துக்கம் தீரும்! நெட்டையானவளே! நீ உன் குழந்தையை எடுத்துக் கொண்டு பழைய வீட்டுக்குப் போகாதே. வேறு இடம் தேடிச் செல்” என்றார். கொடுமைக்காரர்களின் அருகில் இருப்பது ஆபத்து மட்டுமல்ல, பாவமும் கூட.