பதிவு செய்த நாள்
15
மே
2021
05:05
உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம் :
முனைவர் மீனாட்சி பட்டாபிராமன், மதுரையிலிருந்து அனுப்பிய, இ - மெயில் கடிதம்:
இடத்தை கொடுத்தால், மடத்தை பிடுங்குவர் என்ற சொல்வழக்கு, தற்போது உண்மையாகியுள்ளது. வைணவத்தை வாழ்வித்த ராமானுஜரால், 1,000 ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்டது, ஸ்ரீரங்கம் ஸ்ரீரங்க நாராயண மடம். இந்த மடத்தின், 50-வது பட்டத்தை ஏற்றிருந்த, ஸ்ரீமத் ஸ்ரீரங்க நாராயண ஜீயர் சுவாமிகள், 2018-ல் மறைந்ததை அடுத்து, மூன்று ஆண்டுகளாக இந்த மடத்திற்கு, அடுத்த ஜீயர் நியமிக்கப்படவில்லை.இந்நிலையில், ஸ்ரீரங்கம் கோவில் நிர்வாகம், புதிய ஜீயரை தேர்வு செய்வதற்கான விளம்பரத்தை வெளியிட்டுள்ளது.
ஏதோ ஒரு அலுவலகத்தில் காலியான அலுவலக உதவியாளர் பணிக்கு தரப்படும் விளம்பரம் போல, ஜீயரை தேர்வு செய்ய தரப்பட்டுள்ள விளம்பரம் அதிர்ச்சியாகவும், வேடிக்கையாகவும் உள்ளது. கடந்த 2018ல், 50-வது பட்டம் ஜீயர் மறைந்த பின், இரண்டு ஆண்டுகளாக, புது ஜீயரை நியமிக்காமல், மடத்தை சார்ந்தோர் மவுனம் காத்தது ஏன்?இதனால் தானே, அரசியல்வாதிகள் ஆன்மிகத்திலும் மூக்கை நுழைக்கின்றனர். உடனடியாக புது ஜீயர் நியமிக்கப்பட்டிருந்தால், இந்த பிரச்னைக்கு இடமில்லாமல் போயிருக்கும்.
சில மடங்களில் உள்ள நடைமுறை போல, ஒரு ஜீயர் இருக்கும் போதே, அடுத்த பட்டத்துக்கான சீடரை தேர்ந்தெடுத்துவிட்டால், அரசியல் குறுக்கீடு இருக்காதல்லவா?காலியாக உள்ள ஜீயர் பதவிக்கு, 20 பேர் விண்ணப்பித்தால், யாரை தேர்வு செய்வது என்பதில் அரசியலும், பணமும் புகுந்து விளையாடும். அப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட ஜீயர், இறைவனுக்கு அடியவராய் எப்படி இருப்பார்? நிச்சயம் அரசியல்வாதிக்கு அடிமையாகத் தான் இருப்பார்.தி.மு.க., ஏற்கனவே ஆட்சியில் இருந்த போது, பல கோவில்களின் சொத்துக்கள் அபகரிக்கப்பட்டன. அது, மீண்டும் தலையெடுத்துள்ளதோ என, அச்சமாக உள்ளது. இந்த மாதிரியான ஜீயர் நியமனம், இதற்கு முன்னாலும் நடந்துள்ளதாக சொல்லப்படுகிறது. அப்படி நடந்திருந்தால், அது துரதிருஷ்டவசமானது. அந்த தவறு மீண்டும் நடக்காமல், புதிதாக ஆட்சி அமைத்துள்ள தி.மு.க., அரசு பார்த்துக் கொள்ள வேண்டும். தாங்கள், ஹிந்து விரோதிகள் இல்லை என, தேர்தலுக்கு முன்னால் சொன்ன ஸ்டாலின், அதை தற்போது மெய்ப்பித்து காட்ட வேண்டும். ஆன்மிகத்தில் அரசியல் குறுக்கிடாமல், முதல்வர் ஸ்டாலின் பார்த்துக் கொள்ள வேண்டும். தி.மு.க.,வினருக்கு இடம் கொடுத்தோம்; அதனால் இன்று, மடத்தையே பிடுங்குகின்றனர் என, பக்தர்கள் நினைக்கும்படி செய்து விடாதீர்.