விருதுநகர் : சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் ஆவணி மாத பிரதோஷம் மற்றும் அமாவாசை வழிபாட்டில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்கு தடைவிதித்து விருதுநகர் கலெக்டர் மேகநாத ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.
அவரின் செய்தி குறிப்பு: விருதுநகர் மாவட்டத்தில் தற்போது நிலவிவரும் கொரோனா நோய் தொற்று சூழ்நிலையை கருத்தில் கொண்டும், தமிழக அரசு தெரிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறை அடிப்படையிலும், சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு இன்று (செப்டம்பர் 4-ஆம் தேதி) முதல் 6ம் தேதி முடிய சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் செல்வதற்கு தடை விதித்து உத்தரவிடப்படுகிறது. கோவிலில் பூசாரிகள் மூலம் வழக்கம்போல் பூஜைகள் நடைபெறும். எனவே, தாணிப்பாறை மலை அடிவாரத்திற்கும். சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கும் பொதுமக்கள் யாரும் வருகை தர வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறது.