ராஜபாளையம்: ராஜபாளையம் அருகே சோழபுரம் கிராமத்தில் 13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பாண்டியர் கால தமிழ் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் இருந்து சங்கரன்கோவில் செல்லும் ரோட்டில் உள்ளது சோழபுரம். இங்கு ஆரம்ப சுகாதார நிலைய புதிய கட்டுமான பணியின்போது மண்ணுக்கு அடியில் கல்வெட்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டது. அப்பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் திருநாவுக்கரசு தகவலின் பேரில் ராஜபாளையம் ராஜுக்கள் கல்லுாரி வரலாற்றுத் துறை உதவி பேராசிரியரும், தொல்லியல் ஆய்வாளருமான முனைவர் போ. கந்தசாமி மற்றும் வரலாற்றுத் துறை ஆய்வு மாணவர்களோடு கல்வெட்டை ஆய்வு செய்தார்.
இது குறித்து பேராசிரியர் கந்தசாமி கூறியதாவது, மூன்றரை அடி நீளமும் முக்கால் அடி அகலமுடைய பட்டை கல் ஒன்றில் தமிழில் எழுதப்பட்டுள்ள இக்கல்வெட்டு நான்கு வரிகளில் உள்ளது. முதல் வரி சிதைந்த நிலையில் மற்ற வரிகளில் பின்வருமாறு எழுதப்பட்டுள்ளது.
2.பிரம்மதேயம் ஸ்ரீ சுந்தர பாண்டிய சதுர்வேதி மங்கலத்து நூ 3.ருங் கைக்கொண்டு இக்கோயிலில் ஸ்ரீ வழிகானசரக்கு 4.விவூட்டாக இட்டேன் காண வினியப் பெருமாள் பெருமாள் பிள் இறைவனுக்குரிய திருவிடையாட்ட பிரம்மதேயமாக விளங்கிய ஸ்ரீ சுந்தர பாண்டிய சதுர்வேதி மங்கலத்தைச் சேர்ந்த ஒருவர் வைணவத்தின் ஒரு பிரிவினரான வைகானசர் மூலம் பெருமாள் கோயிலுக்கு பணத்தை தானமாக வழங்கப்பட்ட செய்தியை குறிக்கக்கூடிய கல்வெட்டாக அமைந்துள்ளது. எனினும் இதன் தொடர்ச்சியான கல்வெட்டுகளை ஒப்பிடும் போது தான் முழுமையான செய்தியை அறிய முடியும் பிராமணர்களுக்கு வழங்கப்பட்ட கோயில் நிலங்களை பிரம்மதேயம் என்று அழைக்கப்படுகிறது. சோழபுரத்தில் 13ம்நூற்றாண்டை சேர்ந்த உத்தம சோழ விண்ணகராழ்வாரான ஸ்ரீ வெங்கடாஜலபதி பெருமாள் கோயிலும் மற்றும் விக்கிரமபாண்டீஸ்வரர் முடையாரான சிவன் கோயிலும் அமைந்துள்ளது. பெருமாள் கோயில் புனரமைப்பின் போது இக்கல்வெட்டு இடம் மாறி நாளடைவில் மண்ணில் புதைந்து இருக்கக்கூடும். இப்பகுதியில் ஏராளமான கோயில் கற்கள் சிதறிய நிலையிலும் காணப்படுகிறது. சோழபுரத்தை உத்தம சோழ சதுர்வேதி மங்கலம் என்று அழைக்கப்பட்டதாக கல்வெட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. தேவி ஆற்றின் மேற்குக் கரையோரத்தில் கிழக்கு பார்த்த நிலையில் அமைந்துள்ள சிவன் கோயில் மாறவர்மன் விக்கிரம பாண்டியன் (கி.பி.1250 முதல் கி.பி. 1278 வரை)காலத்தில் சிவன் கோயில் கட்டப்பட்டதாக கல்வெட்டு சான்றுகள் தெரிவிக்கிறது. சிவன் கோயிலின் தென் மேற்கே அமைந்துள்ள வெங்கடாஜலபதி பெருமாள் கோவில் கிழக்கு நோக்கியதாக அமைந்துள்ளது. இக்கோவில் உத்தம சோழ விண்ணகர் ஆழ்வார் கோவில் என்று அழைக்கப்பட்டதாக கல்வெட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. எனவே சோழபுரத்தில் சிவன் கோயிலுக்கும் பெருமாள் கோவிலுக்கும் தான தர்மங்களை பற்றி ஏராளமான செய்திகள் கல்வெட்டில் எழுதப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இக்கல்வெட்டை பெருமாள் கோயிலுக்குள் வைத்து பாதுகாப்பதாக பொதுமக்கள் உறுதி அளித்துள்ளனர்.தேவி ஆற்றின் கரையோரம் அமைந்துள்ள இவ்வூரில் ஏராளமான நூல் கருவிகளும் ரோமானிய நாணயங்களும் ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இப்பகுதியில் தொல்லியல் ஆய்வு மேற்கொண்டால் இப்பகுதியின் முழுமையான வரலாற்றை வெளிக்கொணர முடியும் என்று பேராசிரியர் கந்தசாமி கூறியுள்ளார்.