பதிவு செய்த நாள்
23
நவ
2021
10:11
பெரம்பலுார்: பெரம்பலுார் மாவட்டம் சிறுவாச்சூரில், மலை கோவில் உள்ளது. இது சதுரகிரி, திருவண்ணாமலை கோவில்கள் போல, முக்கியமான ஆன்மிக தலம். அங்கிருக்கும் செல்லியம்மன், பெரியசாமி கோவிலில் உள்ள சாமி சிலைகள், செப்., 6 இரவில், மர்ம நபர்களால் முதல் முறையாக உடைக்கப்பட்டன.
தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை அறிவுறுத்தலை தொடர்ந்து, இரு முறை சிறுவாச்சூர் மலை பகுதிக்கு சென்று, உடைபட்ட கோவிலையும், சிலைகளையும் தமிழக பா.ஜ., வழக்கறிஞர் பிரிவு செயலர் அஸ்வத்தாமன் பார்த்துள்ளார். அவர் கூறியதாவது: சிறுவாச்சூர் மலை பகுதியில் மர்மமான முறையில், ஏதோ நடப்பதாக மக்கள் அச்சம் தெரிவித்தனர். அதே நேரம், தமிழக அரசும், காவல் துறையும், சாமி சிலைகளை சேதப்படுத்தும் கும்பலை கண்டறிந்து, முறையான நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கூறி ஆதங்கப்பட்டனர்.
இதையடுத்து, இந்த விஷயத்தில் தி.மு.க., அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பா.ஜ., தரப்பில் வலியுறுத்தினோம்; நடவடிக்கை இல்லை. இந்நிலையில் தான், செப்., 26ல் மீண்டும் மலை கோவிலில் சிலைகள் சேதப்படுத்தப்பட்டன. பல சிலைகள், பீடம் வரை தரைமட்டமாக்கப்பட்டு உள்ளன. பெரியசாமி, பைரவர், செங்கமலை, அய்யனார் சாமி சிலைகள் உடைக்கப்பட்டு உள்ளன.
மதமாற்ற கும்பல்: அடுத்து நவ., 8ம் தேதி இரவும், அதே கோவிலில் மிச்சம் இருந்த சாமி சிலைகளும் உடைக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே பாதி உடைக்கப்பட்ட நிலையில் இருந்த சாமி சிலைகள், முழுமையாக உடைக்கப்பட்டுள்ளன. சிறுவாச்சூர் சம்பவம் போலவே, ஆந்திராவில் 19 மாதங்களில், 128 கோவில்கள் இடித்து சேதப்படுத்தப்பட்டுள்ளன. ஆந்திராவைச் சேர்ந்த, பா.ஜ., ராஜ்யசபா எம்.பி., நரசிம்மராவ், 128 கோவில்களில் சிலைகள் தாக்கப்பட்டது குறித்து, பார்லிமென்டில் பேசினார்.
அதன்பின், ஆந்திர அரசு தீவிர கவனம் செலுத்தி விசாரித்தது. விசாரணையின் முடிவில், மதமாற்ற அடிப்படைவாத சக்திகள், சாமி சிலை உடைப்பு மற்றும் ஹிந்து கோவில்கள் தாக்கப்பட்டதன் பின்னணியில் இருப்பதை கண்டறிந்தனர். ஆந்திராவை அடுத்து, தற்போது தமிழகத்திலும் கோவில் சாமி சிலைகள் உடைக்கப்பட்டுள்ளன. தமிழக தாக்குதல் பின்னணியிலும் மதமாற்ற அடிப்படைவாதிகள் இருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம். இதை போலீசாரிடமும் தெரிவித்துள்ளோம். வனத் துறைக்கு சொந்தமான அடர்ந்த காட்டு பகுதியில் இருக்கும், சிறுவாச்சூர் கோவில்களுக்கு பகல் நேரத்தில் செல்வதே சவாலான விஷயம். அப்படி இருக்கையில், சிலைகள் உடைப்பில் அனுபவம் பெற்றவர்களால் தான் இதை செய்திருக்க முடியும். போராட்டம்ஆந்திராவில் கோவில்களை தாக்கிய அதே கும்பலே கூட இதை செய்திருக்கக்கூடும். அதனால், இதை தமிழக அரசு தீவிரமாக விசாரிக்க வேண்டும். இந்த விஷயத்தில் போலீஸ் மற்றும் ஹிந்து சமய அறநிலையத் துறை அலட்சியமாக உள்ளன. இதன் பின்னணியில் மர்மம் இருப்பது மட்டும் தெரிகிறது.