சபரிமலை: சபரிமலை வருமானம் ரூ.10 கோடியை கடந்தது. கடைகள் ஏலம் போகாததால் தேவசம்போர்டு மாற்று ஏற்பாடுகளில் இறங்கியுள்ளது.
கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக ஆன்லைன் முன்பதிவு மூலம் சபரிமலையில் தினமும் 45 ஆயிரம் பக்தர்கள் வீதம் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். முன்பதிவு செய்தவர்களில் 70 சதவீதம் வரைதான் வருகின்றனர். நடை திறந்த 11 நாட்களில் ஒரு லட்சத்து 19 ஆயிரத்து 238 பேர் தரிசனம் செய்துள்ளனர். அதிக பட்சமாக நவ.26 ல் 18 ஆயிரத்து 427 பேர் தரிசனம் நடத்தினர். அப்பம் ,அரவணை விற்பனை மற்றும் கடைகள் ஏலம் மூலம் இந்த நாட்களில் தேவசம்போர்டின் வருமானம் ரூ. 10 கோடியை கடந்துள்ளது. முன்பதிவு செய்த பக்தர்கள் அனைவரும் தரிசனத்துக்கு வந்தால் வருமானம் மேலும் அதிகரிக்கும்.
மாற்று ஏற்பாடு: பல முறை ஏலம் விட்ட பின்னரும் கடைகளை எடுக்க வியாபாரிகள் தயாராக வில்லை. பக்தர்கள் கூட்டம் குறைவு, அவர்கள் சன்னிதானத்தில் தங்க முடியாது என்பதாலும் வியாபாரிகள் இணைந்து ஏலம் கேட்காமல் உள்ளனர். இதனால் தேவசம்போர்டு மாற்று ஏற்பாடுகளில் தீவிரமாக இறங்கியுள்ளது. அரசு மற்றும் கூட்டுறவு அமைப்புகள் மூலம் கடைகளை திறப்பதற்காக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
இதுகுறித்து தேவசம்போர்டு தலைவர் அனந்தகோபன் கூறியதாவது:வியாபாரிகள் இணைந்து பேரம் பேசுவதை அனுமதிக்க முடியாது. பக்தர்கள் பாதிக்காமல் இருக்க அரசு ஏஜன்சிகள் மூலம் கடைகள் திறக்கப்படும். கழிவறைகளில் தொழிலாளர்கள் இல்லை என்ற நிலை ஏற்பட்டால் தேவசம்போர்டு நேரடியாக ஒப்பந்த அடிப்படையில் தொழிலாளர்களை நியமிக்கும், என்றார். பத்தணந்திட்டையில் கேரள அரசு போக்குவரத்துக்கழகத்தின் கே.எஸ்.ஆர்.டி.சி.ஹப் என்ற திட்டத்தை அமைச்சர் வீணாஜார்ஜ் தொடங்கி வைத்தார். இதன்படி தொலை துாரங்களில் இருந்து பஸ்களில் பம்பைக்கு டிக்கெட்டு எடுத்து பயணிக்கும் பக்தர்கள் இங்கு இறங்கி நான்கு மணி நேரம் ஓய்வு எடுத்த பின்னர் அதே டிக்கெட்டில் பம்பைக்கு பயணிக்கலாம். அவர்கள் ஓய்வெடுக்க பத்தணந்திட்டை பஸ்ஸ்டாண்டில் வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் இயக்கப்படும் பஸ்கள் வழியில் எங்கும் நிற்காமல் பம்பை செல்லும். இதற்காக 65 பஸ்கள் அனுமதிக்கப்பட்டுள்ளது.