பதிவு செய்த நாள்
28
டிச
2021
12:12
மதுரை : அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் சார்பில் சபரிமலை மண்டல காலத்தில் 3.10 லட்சம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மகரவிளக்கின் போதும் வழங்கப்பட உள்ளது.
இந்த மண்டல காலத்தில் இச்சங்கம் சார்பில் தினமும் காலை 6:30 மணி முதல் இரவு 11:00 மணி வரை அன்னதானம் வழங்கப்பட்டது.இச்சேவையில் தமிழ்நாடு 623, கர்நாடகா 52, கேரளா 15 பேர் ஈடுபட்டனர். சபரிமலை வந்த அமைச்சர் சேகர்பாபு, முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் ஆகியோரும் அன்னதானம் வழங்கினர். தேவசம் போர்டு வேண்டுகோள்படி, சேவா சங்க தொண்டர்கள் நெய் தேங்காய் உடைத்தல், அப்பம் பேக்கிங் செய்தல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டனர். சன்னிதானம், நிலக்கல், அப்பாச்சிமேடு, மரக்கூட்டம் பகுதிகளில் உடல்நலம் பாதித்த பக்தர்களை மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லும் சேவையில் 154 முறை ஸ்டிரெச்சர் பயன்படுத்தப்பட்டது.மகரவிளக்கின்போதும் பக்தர்களுக்கு தேவையான உணவு, தண்ணீர், ஸ்டிரெச்சர் சேவைகளை வழங்க நிர்வாகிகள் விஸ்வநாதன், ஐயப்பன், கிருஷ்ணமூர்த்தி, சன்னிதான முகாம் அலுவலர் பாலசுப்பிரமணியம் ஏற்பாடு செய்து வருகின்றனர்.