மதுரை மீனாட்சி கோவில் ஆபரணங்கள்: ஹிந்து அமைப்புகள் சந்தேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08ஏப் 2022 10:04
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உற்ஸவர் சிலைகளுக்கு அணிவிக்கப்படும் விலை உயர்ந்த ஆபரணங்கள் பற்றி ஹிந்து அமைப்புகள் சந்தேகம் எழுப்பியுள்ளன.
இக்கோவில் சித்திரை திருவிழா ஏப்.5 முதல் நடந்து வருகிறது. தினமும் காலை, மாலை அம்மனும், சுவாமியும் வீதி உலா வருகின்றனர். திருமலை நாயக்கர் உள்ளிட்ட மன்னர்கள், செல்வந்தர்கள், ஜமீன்தாரர்கள் வழங்கிய விலை மதிப்புள்ள நவரத்தின மாலைகள், கீரிடங்கள் உள்ளிட்டவை உற்ஸவர்களுக்கு வீதி உலாவின் போது அணிவிக்கப்பட்டு வருகின்றன.
ஆபரணங்களில் இருந்த முத்துக்கள், வைரக்கற்கள் போன்றவை மாயமாகி உள்ளன. சில ஆபரணங்கள் பளிச்சென இல்லாமல் உள்ளன. இவை உண்மையிலேயே நிஜ ஆபரணங்கள் தானா, முறைகேடு நடந்துள்ளதா என ஹிந்து அமைப்புகள் சந்தேகம் கிளப்பியுள்ளன. இதுகுறித்து கோவில் இணைகமிஷனர் செல்லத்துரையிடம் ஹிந்து மக்கள் கட்சி மாவட்ட தலைவர் சோலைக்கண்ணன் நேற்று மனு அளித்தார். நமது நிருபரிடம் இணைகமிஷனர் கூறுகையில், அனைத்து ஆபரணங்களும் பாதுகாப்பாக உள்ளன. காலப்போக்கில் ஆபரணங்களில் இருந்தவை சில கழன்று விழுந்தன. அவை பத்திரமாக எடுத்து பாதுகாக்கப்பட்டு வருகின்றன. பழைய ஆபரணங்களில் புதியவற்றை பொருத்தினால் வித்தியாசமாக தெரியும் என்பதால் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசித்து வருகிறோம் என்றார்.