ராமேஸ்வரம்: தமிழ்ப் புத்தாண்டையொட்டி ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் இருந்து சுவாமி, அம்மன் புறப்பாடாகி பக்தர்களுக்கு தீர்த்தம் வாரி கொடுத்தனர். ஏராளமான பக்தர்கள் புனித நீராடினர்.பல்வேறு மாவட்டங்களிலிருந்து வந்த பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தீர்த்தங்களில் புனித நீராடி, தரிசனம் செய்தனர். நேற்று காலை 9:30 மணிக்கு கோயிலில் இருந்து சுவாமி, பர்வதவர்த்தினி அம்மன், பிரியாவிடை அம்மன் தங்க ரிஷப வாகனத்தில் புறப்பாடாகி, அக்னி தீர்த்த கடற்கரையில் எழுந்தருளினர். பின் சுவாமி, அம்மனுக்கு மகா தீபாராதனை நடந்தது. அங்கு பக்தர்களுக்கு கோயில் குருக்கள் தீர்த்தம் வாரி கொடுத்தனர். பின் சுவாமி, அம்மன் நான்கு ரதவீதிகளில் உலா வந்தனர்.