பதிவு செய்த நாள்
09
மே
2022
08:05
சென்னை: சிதம்பரம் நடராஜர் கோவிலில் அமைந்திருக்கும் கனகசபையில், பக்தர்களை அனுமதிப்பது குறித்து, தமிழக அரசு தான் முடிவெடுத்து அறிவிக்க வேண்டும் என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில், கடலுாரைச் சேர்ந்த எம்.என்.ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்த மனு: கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக, கடலுார் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள கனகசபை மண்டபத்தில் ஏறி, சுவாமி தரிசனம் செய்ய, பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. தற்போது, கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு உள்ளதால், கனகசபையில் இருந்து பக்தர்கள், சுவாமியை தரிசிக்க அனுமதிக்கும்படி உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனு தலைமை நீதிபதி எம்.என்.பண்டாரி, நீதிபதி பரதசக்கர வர்த்தி இடம் பெற்ற, முதல் பெஞ்சில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் கனகராஜ் ஆஜரானார். அரசு தரப்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் சண்முகசுந்தரம், கொரோனா கட்டுப்பாடுகளால், கனகசபை மீது ஏறி, பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டது. தற்போது, கொரோனா நான்காவது அலை பரவ வாய்ப்புள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட பகுதியில், தரிசனத்துக்கு அனுமதிப்பது குறித்து, எந்தவித முடிவும் எடுக்கப்படவில்லை என்றார்.இருதரப்பு வாதங்களுக்கு பின், அரசின் விளக்கத்தை ஏற்கிறோம்; எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது. கனகசபையில் இருந்து, சுவாமி தரிசனம் செய்ய பக்தர்களை அனுமதிக்கும் விவகாரத்தில், அரசே உரிய முடிவை எடுக்க வேண்டும் என அறிவுறுத்திய நீதிபதிகள், அத்துடன் வழக்கை முடித்து வைத்தனர்.