பதிவு செய்த நாள்
10
மே
2022
04:05
மானாமதுரை: மானாமதுரையில் சதாசிவ பிரம்மேந்திராள் ஆராதனை விழாவில் ஏராளமான கர்நாடக இசைக் கலைஞர்கள் பங்கேற்று இசை அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
கர்நாடக இசைக் கலைஞர்களின் குருவாக போற்றப்படும் சதாசிவ பிரம்மேந்திராள் மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன் கோயிலிலுள்ள சோமநாதர் சன்னதிக்கு பின்புறம் உள்ள சன்னதியிலும்,கரூர் அருகே உள்ள நெரூர்,காசி,ஓம்கார்,பாகிஸ்தானில் உள்ள கராச்சி உள்ளிட்ட 5 இடங்களில் ஒரே நேரத்தில் ஜோதி ரூபமாக ஜீவசமாதி அடைந்துள்ளார்.இதனை கொண்டாடும் விதத்தில் வருடந்தோறும் மேற்பட்ட 5 இடங்களிலும் ஆராதனை விழா நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் கடந்த 2 வருட காலமாக கொரோனா தொற்று காரணமாக மானாமதுரையில் ஆராதனை விழா நடைபெறாத நிலையில் இந்தாண்டு ஆராதனை விழா நேற்று மானாமதுரை புது பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள தனியார் திருமண மஹாலில் துவங்கியது. காலை 8:00 மணிக்கு சதாசிவ பிரம்மேந்திராள் உருவப்படத்திற்கு ஆராதனை கமிட்டியினர் மற்றும் ஏராளமான கர்நாடக இசைக் கலைஞர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தி அஞ்சலி செலுத்தினர். அதனைத் தொடர்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட கர்நாடக இசைக் கலைஞர்கள் பங்கேற்ற வாய்ப்பாட்டு, வயலின்,வீணை,புல்லாங்குழல், மாண்டலின் இசைக் கச்சேரிகளும் மாலை பாராட்டு விழாவும் நடைபெற்றது.இன்று காலை 7:00 மணியிலிருந்து ஆனந்தவல்லி அம்மன் கோயிலில் பூஜை உஞ்சவிருத்தி,குரு அஞ்சலி,கோஷ்டி கானம், வடுக பூஜை,கன்யா பூஜை சொற்பொழிவு மற்றும் பல நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.இதற்கான ஏற்பாடுகளை சதாசிவ பிரம்மேந்திராள் ஆராதனை கமிட்டி நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.