பதிவு செய்த நாள்
03
ஆக
2012
12:08
திருநெல்வேலி : 100 ஆண்டுகளுக்கு பின் தாமிரபரணி சிந்துபூந்துறை தைப்பூச தீர்த்தவாரி மண்டபத்தில் தாமிரபரணி அம்பாள், சுவாமி இந்திரனுக்கு 36 வகையான அபிஷேகங்களும், நதியில் தீர்த்தவாரி உற்சவமும் கோலாகலமாக நடந்தது. நதியில் ஏராளமான பக்தர்கள் நீராடி வழிபட்டனர். நெல்லை ஜங்ஷன் கைலாசபுரத்தில் நாயக்கர் மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட
சிந்துபூந்துறை தைப்பூச தீர்த்தவாரி மண்டபம் அமைந்துள்ளது. 27 நட்சத்திரங்களுக்குரிய அம்சங்கள் மண்டபத்தில் இடம்பெற்றுள்ளன. 1908ம் ஆண்டு இந்த மண்டபத்தில் தான் வ.உ.சி., சுப்பிரமணிய சிவா, சுதந்திர போராட்ட வீர முழக்கமிட்டுள்ளனர். பாரதியார், வாஞ்சிநாதன் ஆகியோரும் தைப்பூச மண்டபத்தில் பேசியுள்ளனர். இங்கு 100 ஆண்டுகளுக்கு முன்பு ஆடிப் பெருக்கு நாளில் தாமிரபரணி அம்பாள், சுவாமி இந்திரனுக்கு சிறப்பு தீர்த்தவாரி அபிஷேகங்கள் நடந்தன. பின்னர் காலப்போக்கில் இந்த உற்சவங்கள் நடைபெறவில்லை. இதையடுத்து தாமிரபரணி பாதுகாப்பு அமைப்பு மற்றும் அறநிலையத்துறை இணைந்து ஆடிப்பெருக்கு தீர்த்தவாரி உற்சவத்தை ஆடிப்பெருக்கான நேற்று மீண்டும் நடத்தினர். இதற்காக நெல்லையப்பர் கோயிலில் இருந்து தாமிபரணி அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் பவனி புறப்பட்டது. எதிர்சேவையாக பேட்டை சர்க்கரை விநாயகர் கோயிலில் இருந்து சுவாமி இந்திரன் புறப்பட்டு, அம்பாளுடன் வந்தார். மேளதாளம், பஞ்சவாத்தியங்கள் முழங்க, நெல்லையப்பர் கோயில் யானை காந்திமதி முன்னே கம்பீரமாக நடந்துவர தாமிரபரணி அம்பாள், சுவாமி இந்திரன் நெல்லை சிந்துபூந்துறை தைப்பூச தீர்த்தவாரி மண்டபத்திற்கு எழுந்தருளினர். தீர்த்தவாரி மண்டபத்தில் தாமிரபரணி பூஜா கல்ப விதான பூஜை, மகா கணபதி பூஜை, பிரம்மன், விஷ்ணு, ருத்ரன், கவுரி, இந்திராதி பூஜை, நவக்கிரஹ பூஜை, லோபா முத்திரை, அகஸ்தியருக்கு பூஜை, இந்திராக்கினி பூஜைகள் நடந்தது. சகஸ்ரநாம அர்ச்சனை, ஹோமம், பூர்ணாஹூதியும், தாமிரபரணி அம்பாள், சுவாமி இந்திரனுக்கு 36 வகையான திரவியங்களால் அபிஷேகம், அலங்கார தீபாராதனையும் நடந்தது. பாபநாசம், காரையாறு, குற்றாலம் உள்ளிட்ட முக்கிய நதி தீரங்களில் இருந்து எடுத்துவரப்பட்ட புனித நீர் அம்பாளுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. தாமிரபரணி அம்பாள், இந்திரனை கும்பத்தில் ஆவாஹணம் செய்து, நதியில் சிறப்பு தீர்த்தவாரியும் நடந்தது. 100 ஆண்டுகளுக்கு பின் தீர்த்தவாரி உற்சவம் நடந்தததால் மேளதாளம், பஞ்சவாத்யங்களுடன் ஏராளமான பக்தர்கள் குலவையிட்டு,
தாமிரபரணி நதியில் நீராடினர். பூஜைகளை மணிகண்டன் வாத்தியார், சங்கர் சர்மா, நெல்லையப்பர் கோயில் அர்ச்சகர் மணிகண்டன் குழுவினர் நடத்தினர். மழைவேண்டி சிறப்பு பிரார்த்தனை மழைவேண்டி அமிர்தவர்ஷினி ராகத்தில் தாமிரபரணி நதியை பற்றியும், மழைவேண்டி பாடல்களையும் களக்காடு அம்புஜம் பாடினார். நெல்லை சின்மயா மேல்நிலைப்பள்ளி மாணவிகளும் பாடல்களை பாடினர். தாமிரபரணியின் சிறப்புக்கள் குறித்து பேச்சாளர் சடகோபன் விளக்கினார். தப்பாட்ட குழுவினர் தாமிரபரணி நதி குறித்த பாடல்களை பாடி நடனம் ஆடினர். விளக்கு வழிபாடு ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு
இரவு தாமிரபரணி நதியில் பெண்கள் விளக்கேற்றி அதை நதியில் விட்டு வழிபட்டனர். ஆக்ரமிப்புகளால் பாதிப்பு தீர்த்தவாரிக்காக சப்பரம் வரும் வழி அகலமாக இருந்தது. தற்போது வீடுகள் ஆக்ரமித்து கட்டப்பட்டுள்ளதால் சப்பரத்தில் சுவாமி, தீர்த்தவாரி மண்டபத்திற்கு வருவதற்கு சிரமம் ஏற்பட்டது. ஆக்ரமிப்புகளை அகற்றவேண்டும் எனவும் பக்தர்கள் வலியுறுத்தினர். விழாவில் போலீஸ் கமிஷனர் கருணாசாகர், அறநிலையத்துறை இணை ஆணையர் அன்புமணி, செயல் அலுவலர் யக்ஞ நாராயணன், தாமிரபரணி அமைப்பு நிறுவனர் பாலசுப்பிரமணிய ஆதித்தன், ஓய்வு பெற்ற தாசில்தார் முத்துசாமி, பி.ஆர்.ராமகிருஷ்ணன், வக்கீல் சிதம்பரம், பேச்சாளர் சடகோபன், மருதூர் ராமசுப்பிரமணியன், வித்யாசேகர், கோமகன், சிவகாமிநாதன், சேவை பாரதி கணேசன், வேணுகோபால், கயிலை சுவாமிநாதன், கண்ணன், ஓவிய ஆசிரியர் வள்ளி, சங்கர்ராம், சின்மயா பள்ளி முதல்வர் ரேணுகா சங்கரநாராயணன், புவனேஸ்வரி, பார்வதி கார்த்தீசன், தயானந்த பாரதி, வினோத், காந்தி,
ராஜன், சுவாமி செல்வக்குமார், செண்பகராமன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.