பதிவு செய்த நாள்
16
ஜூலை
2022
09:07
சென்னை: சென்னை, திருச்சி, தஞ்சாவூர், மதுரை மாவட்டங்களில் பிரசித்தி பெற்ற அம்மன் கோயில்களுக்கு சுற்றுலாத்துறையுடன் ஒருங்கிணைந்து ஆடி மாதம் பக்தர்கள் ஆன்மிக சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவர் என ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தமிழக அரசு தரப்பில் வெளியான அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: சட்டசபை மானியக் கோரிக்கையில் தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற அம்மன் கோயில்களுக்கும், வைணவ கோயில்களுக்கும் முக்கிய விழா நாட்களில் ஆன்மிகப் பயணம் செல்ல சுற்றுலாத்துறையுடன் ஒருங்கிணைந்து ஏற்பாடுகள் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பை செயல்படுத்தும் விதமாக எதிர்வரும் ஆடி மாதம் சென்னை, திருச்சி, மதுரை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களை தலைமையிடமாக கொண்டு அம்மன் கோயில்களுக்கு ஆன்மிக சுற்றுலா செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை: சென்னை மாவட்டத்தில் உள்ள பாரிமுனை காளிகாம்பாள் கோயில், ராயபுரம் அங்காள பரமேஸ்வரி கோயில், திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோயில் உள்ளிட்ட 9 கோயில்களுக்கு ஒரு பயணத்திட்டமும், சென்னை மயிலாப்பூர் கற்பகாம்பாள் கோயில், முண்டக கண்ணியம்மன் கோயில், மாங்காடு காமாட்சியம்மன் கோயில், திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோயில் உள்ளிட்ட 10 கோயில்களுக்கு இரண்டாவதாக ஒரு பயணத்திட்டமும் செயல்படுத்தப்படும்.
திருச்சி: திருச்சி மாவட்டத்தில் உள்ள உறையூர் வெக்காளியம்மன் கோயில், சமயபுரம் மாரியம்மன் கோயில், சிறுவாச்சூர் மதுர காளியம்மன் கோயில், திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி அம்மன் உள்ளிட்ட 8 கோயில்களுக்கு ஒரு பயணத்திட்டமும் செயல்படுத்தப்படும்.
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள புன்னைநல்லூர் மகா மாரியம்மன் கோயில், திருக்கருக்காவூர் கற்பக ராட்சாம்பிகை கோயில், தஞ்சை பிரகதீஸ்வரர் உள்ளிட்ட 10 கோயில்களுக்கு ஒரு பயணத்திட்டமும் செயல்படுத்தப்படும்.
மதுரை: மதுரை மாவட்டத்தில் உள்ள மீனாட்சி அம்மன் கோயில், மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில், அரியாக்குறிச்சி வெட்டுடையார் காளியம்மன் உள்ளிட்ட 6 கோயில்களுக்கு ஒரு பயணத்திட்டமும் செயல்படுத்தப்படும்.
இந்த ஆன்மிக சுற்றுலா பக்தர்களுக்கு மிகக் குறைந்த கட்டணத்தில் மதிய உணவுடன் செயல்படுத்தப்பட உள்ளது. மேலும், பக்தர்களுக்கு கட்டணமில்லா சிறப்பு தரிசனம் செய்து வைக்கப்பட்டு கோயில் பிரசாதம், கோயில்கள் பற்றிய விவரங்கள் அடங்கிய கையேடு வழங்கப்படும். பக்தர்கள் ஆன்மிக சுற்றுலா தொடர்பாக சுற்றுலாத்துறையில் பதிவு செய்தல் வேண்டும். மேலும் இது தொடர்பாக ttdconline.com என்ற சுற்றுலாத்துறை இணையத்தில் தெரிந்துக் கொள்ளலாம். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.