பதிவு செய்த நாள்
16
ஜூலை
2022
09:07
சென்னை :கோவில்களில் ஆகம விதிகளின்படியே அர்ச்சகர்களை நியமிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம்உத்தரவிட்டுள்ளது. ஆகம விதிகளை பின்பற்றும் கோவில்களை கண்டறிய, ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்கவும், தமிழக அரசுக்கு அறிவுறுத்தி உள்ளது.
மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள துளசி பீடத்தின் நிறுவனரான ஜெகத்குரு ராமானந்தாச்சார்யா சுவாமி ராம்பத்ராச்சார்யா, பிரதமர் அலுவலகத்தில் இணைச் செயலராக பதவி வகித்த, உ.பி.,யைச் சேர்ந்த டாக்டர் புரேலால், பேராசிரியர் மக்கன்லால், வினய்குமார் ராவ். டில்லியைச் சேர்ந்த பேராசிரியர் கபில்குமார், பெங்களூரைச்சேர்ந்த வெங்கட்ரமணன் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட ஒன்பது பேர் தாக்கல் செய்த மனு:தமிழகத்தில், 1,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவில்கள் ஏராளமாக உள்ளன. இந்த கோவில்களை பாதுகாக்க வேண்டிய கடமை, ஒவ்வொருவருக்கும் உள்ளது.
அறிக்கை: கோவில்களில் அர்ச்சகர் களை நியமிப்பதற்கான தகுதி தொடர்பான விதிகள்வகுக்கப்பட்டுள்ளன. உயர்மட்டக் குழு அளித்த அறிக்கை அடிப்படையில், 2020ல் விதிகள் வகுக்கப்பட்டுள்ளன. இவை, உச்ச நீதிமன்ற உத்தரவுகள் மற்றும் ஆகம விதிகளை மீறுவதாக உள்ளன.சேஷம்மாள் மற்றும் ஆதி சைவ சிவாச்சாரியார்கள் வழக்கில், சைவ மற்றும் வைணவ கோவில்களில் அர்ச்சகர்கள் நியமனம், குறிப்பிட்ட பிரிவினரில் இருந்து, ஆகம விதிகளின்படி இருக்க வேண்டும் என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.ஆகம விதிகளில் நிர்ணயிக்கப்பட்ட அர்ச்சகர் நியமனம், ஜாதி மற்றும் பிறப்பு அடிப்படையில் இல்லை. கோவில்களுக்கான ஆகமத்தின்படி,அர்ச்சகர்கள் நியமனத்தை மேற்கொள்ளத் தவறினால், மத நடைமுறைகளில் குறுக்கிடுவது போலாகும்.அர்ச்சகர் பயிற்சிக்கு குறைந்தபட்ச வயது 14 ஆக உயர்மட்டக் குழு பரிந்துரைத்துள்ளது.
விதிகள் செல்லாது: இது, ஆகம விதிகளுக்கு எதிரானது. ஓராண்டு அர்ச்சகர் பயிற்சி அடிப்படையில் நியமனம் செய்வதும், உச்ச நீதிமன்ற உத்தரவு மற்றும் ஆகம விதிகளை மீறுவதாகும்.எனவே, 2020ல் ஏற்படுத்தப்பட்ட விதிகளின் அடிப்படையில், அர்ச்சகர் களை நியமிக்க, தடை விதிக்க வேண்டும். இந்த விதிகள் செல்லாது என உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. இம்மனு, தலைமை நீதிபதி எம்.என்.பண்டாரி, நீதிபதி என்.மாலா அடங்கிய முதல் பெஞ்ச் முன், நேற்று விசாரணைக்கு வந்தது.அரசு தரப்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் சண்முகசுந்தரம்,வழக்கு தொடர்ந்தவர்கள் யாரும், தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல; வழக்கு தொடர அவர்களுக்கு உரிமை இல்லை. ஆகம விதிகளை பின்பற்றும் கோவில்களை கண்டறிய, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, என்றார்.
இதையடுத்து, முதல் பெஞ்ச் பிறப்பித்த உத்தரவு:தமிழகத்தில், ஆகம விதிகளை பின்பற்றும் கோவில்கள் எவை என கண்டறிய, ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்க வேண்டும். கோவில்களின் வரலாறு, பாரம்பரியம் தெரிந்தவர்களை, உறுப்பினர்களாக நியமிக்க வேண்டும். ஒரு மாதத்தில், இந்தக் குழுவை அமைக்க வேண்டும்.ஆகம விதிகளை பின்பற்றும் கோவில்களை கண்டறிந்த பின், அவற்றின் பட்டியலை வெளியிட வேண்டும். அர்ச்சகர்கள் நியமனத்தைப் பொறுத்தவரை, உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், ஆகம விதிகளின்படியே இருக்க வேண்டும். இதில் விதிமீறல் இருந்தால், அந்த நியமனங்களை எதிர்த்து, தனிப்பட்டவர்கள் வழக்கு தொடரலாம்.இவ்வாறு முதல் பெஞ்ச் உத்தரவிட்டது.அதைத் தொடர்ந்து, குழுவுக்கு, உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ராஜுவை நியமிக்கலாம் என, அட்வகேட் ஜெனரல் தெரிவித்தார். அதுகுறித்து, மனுதாரர்கள் தரப்பு பதில் அளிக்க, முதல் பெஞ்ச் உத்தரவிட்டது.