ஸ்ரீவில்லிபுத்தூர்: சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் ஆடி மாத பிரதோஷத்தை முன்னிட்டு சுவாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள், வனத்துறையினர் அனுமதிக்காததால் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
சதுரகிரி மலைப் பகுதியில் அவ்வப்போது பெய்து வரும் சாரல் மழை காரணமாக ஆடி மாத பிரதோஷம் மற்றும் பவுர்ணமி வழிபாட்டிற்கு ஆகஸ்ட் 12 வரை பக்தர்களுக்கு அனுமதி இல்லை என வனத்துறையினர் நேற்று முன்தினம் அறிவித்திருந்தனர். இந்நிலையில் பிரதோஷ நாளான நேற்று அதிகாலை, தாணிப்பாறை வனத்துறை கேட் முன்பு நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் குவிந்திருந்தனர். ஆனால், ஓடைகளில் நீர்வரத்து காரணமாக பக்தர்களுக்கு அனுமதி இல்லை என வனத்துறையினர் தெரிவித்தனர். இதனையடுத்து பக்தர்கள் கேட்டின் முன்பு, சூடமேற்றி கோயிலை நோக்கி வணங்கி ஏமாற்றத்துடன் திரும்பினர். கோயிலில் மாலை 04:30 மணிக்கு மேல் பிரதோஷ வழிபாடு பூஜைகளை கோயில் பூசாரிகள் செய்தனர். ஏற்பாடுகளை அறங்காவலர் ராஜா பெரியசாமி, செயல் அலுவலர் நாகராஜன் செய்திருந்தனர்.