பதிவு செய்த நாள்
10
ஆக
2022
03:08
மதுரை : மேலூர் வட்டம், தும்பைப்பட்டி சிவாலயபுரத்தில் எழுந்தருளி அருள்பாலித்து வரும் கோமதி அம்பிகை சமேத, சங்கர லிங்கம் சுவாமி, சங்கர நாராயணர் சுவாமி கோயிலில் ஆடி தபசு திருவிழாவில் இன்று (10ம்தேதி) 7.15 மணிக்கு கணபதி ஹோமம், வாஸ்து பூஜை, நவக்கிரக யாகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பால்குடம், பன்னீர் குடம், சந்தனக் குடம் பக்தர்கள் எடுத்து வந்து சுவாமிகளுக்கு அபிஷேகம் சிறப்பு அர்ச்சனை அலங்காரம் நடைபெற்றது. கோமதி அம்மன் வேண்டுதலுக்கிணங்க, சங்கரலிங்கம் சுவாமி சங்கர நாராயணராக பக்தர்களுக்கு காட்சி அளித்தார், சுவாமிகள் புறப்பாடு நடைபெற்று பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.
நாட்டில் மக்கள் நோயற்ற வாழ்விற்கும், அமைதி தழைத்தோங்கவும், விவசாயம் செழித்தோங்கவும், மழை பெய்ய வேண்டியும், கொரோனா தொற்று நோயிலிருந்து மக்கள் விடுபடவும், சிறப்புப் பிரார்த்தனையும் நடைபெற்றது. இன்று ஆடித் தபசு திருவிழாவை முன்னிட்டு சுவாமிகளுக்கு முன்னிட்டு, எண்ணெய் காப்பு சாற்றி, திரவியம், மஞ்சள், பஞ்சகவ்யம், பச்சரிசி மாவு, திருமஞ்சனம், பால், தயிர், இளநீர், கரும்பு சாறு, பழச்சாரு, பஞ்சாமிர்தம், தேன், ஸ்வர்ணம், சந்தனம், பன்னீர், திருநீர் போன்ற பதினாறு வகையான அபிக்ஷேகங்கள் நடைபெற்றது. சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் காட்சி தந்தனர். தும்பைப்பட்டி சங்கரன் வழி பங்காளிகள் குடும்பத்தினர், மற்றும் பக்தர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர். விழாவில் கலந்து 2000-க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அன்னதானம் நடைபெற்றது. திருக்கோயில் அர்ச்சகர் ராஜேஷ், அரவிந்த் குருக்கள், வெங்கடேஷ்குருக்கள் சங்கர நாராயணர் கல்வி அன்னதான அறக்கட்டளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.