பதிவு செய்த நாள்
01
செப்
2022
06:09
சூலூர்: சூலூர் தாலுகாவில்,பல்வேறு அமைப்புகள், பொதுமக்கள் சார்பில், 163 விநாயகர் சிலைகள் நேற்று பிரதிஷ்டை செய்யப்பட்டன.
சூலூர் தாலுகாவுக்கு உட்பட்ட கருமத்தம்பட்டியில், ஹிந்து முன்னணி மற்றும் பொதுமக்கள் சார்பில், 35 இடங்களில் விநாயகர் சிலைகள்,நேற்று காலை பிரதிஷ்டை செய்யப்பட்டு, வழிபாடுகள் நடந்தன. திருப்பூர் மேற்கு மாவட்ட தலைவர் சுப்பிரமணியம் தலைமை வகித்தார். சூலூரில், ஹிந்து முன்னணி சார்பில், 46 இடங்களிலும், வி.இ.ப., சார்பில்,14 இடங்களிலும், இ.ம.க., சார்பில், மூன்று இடங்களிலும், சக்தி சேனா ஒரு இடத்திலும், பொதுமக்கள் சார்பில், 16 இடங்களிலும் விநாயகர் சிலைகள் கணபதி ஹோமம் நடத்தி பிரதிஷ்டை செய்யப்பட்டது. ஹிந்து முன்னணி மேற்கு மாவட்ட செயலாளர் ராஜ்குமார் தலைமை வகித்தார். பெருமாள் கோவில் திடலில் சிவபெருமானை விநாயகர் சுற்றி வருவது போல் அமைக்கப்பட்டிருந்தை பொதுமக்கள், சிறுவர், சிறுமியர் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர். கே.பி.ஆர்., பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி வளாகத்தில், விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு, வழிபாடுகள் நடந்தன. முதல்வர் அகிலா மற்றும் பேராசிரியர்கள், அலுவலர்கள் பங்கேற்றனர். பாரதி புரத்தில் தமிழ்நாடு வி.இ.ப., சார்பில் விநாயகர் சதுர்த்தி பூஜை நடந்தது. மாநில இணை பொதுச்செயலாளர் விஜயகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். சுல்தான்பேட்டையில், 38 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன.