பதிவு செய்த நாள்
01
செப்
2022
07:09
அறிவியலும், ஆன்மிகமும் இரண்டற கலந்த விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தின் அவசியத்தை, இளைய தலைமுறையினருக்கு எடுத்துரைக்கும் விதமாக சென்னை, வடபழநி முருகன் கோவிலில் தக்கார் சார்பில், களிமண்ணாலான விநாயகர் சிலைகள் மூன்றாம் ஆண்டாக பக்தர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டன.விநாயகர் சதுர்த்தி, ஹிந்துக்களின் வழிபாட்டு முறை, கொண்டாட்டம் என்பதைக் கடந்து, அதன் பின்னணியில் அறிவியல் இருப்பதையும் நாம் அறிய வேண்டியது அவசியம்.
பண்டைய காலங்களில், தென்மேற்கு பருவ மழைக்கு முன்னதாக குளம், குட்டை, ஏரிகள் துார் வாரி ஆழப்படுத்தப்பட்டன.இப்பணியின் போது, நீர்நிலைகளின் அடியில் தேங்கியிருந்த களிமண் தோண்டி எடுக்கப்பட்டு கரையில் சேகரித்து வைக்கப்பட்டது.துார் வாரப்பட்டதால் மிக எளிதாக நுண்துளைகளின் வழியே நீர் உள் இறங்கி, நிலத்தடி நீரை உயர்த்தியது. குளத்தின் கொள்ளளவு அதிகரித்து மழையின்போது கூடுதல் நீரும் சேகரமானது.அடுத்த பருவமழை துவங்கும் முன், இடைப்பட்ட நாட்களில், ஏற்கனவே குளத்தில் இருந்து துார்வாரப்பட்டு வெளியே எடுத்து சேகரிக்கப்பட்ட களிமண் மீண்டும் அதே குளத்தில் கரைத்து விடப்பட்டது.
விழிப்புணர்வு இல்லை: அது, நீரின் அடியில் தேங்கி நுண்துளைகளை அடைத்தது. மீண்டும் மழைபொழிந்ததும் குளம் விரைவாக நிரம்பி விவசாயம் செழித்தது; ஊரும் செழித்தது.துார் வாரப்பட்ட களிமண்ணை பொதுமக்கள் எடுத்துச் சென்று அவரவர் வீடுகளில் பிள்ளையார் பிடித்து வைத்து, வழிபாட்டிற்கு பின் அவற்றை குறிப்பிட்ட நாளில் நீர் நிலைகளில் கரைக்க வேண்டும் என, ஒரு வழிபாட்டு முறையை உருவாக்கினர். இவ்வாறு துவங்கிய விநாயகர் சதுர்த்தி வழிபாட்டு முறை, ஹிந்து மதத்துக்குரியது என்பது மாறி, பின்னாளில் மாற்று மதத்தினரும் ஏற்றுக்கொண்டு வரவேற்பு அளித்தும், மரியாதை செலுத்தியும் வருகின்றனர்.இன்றைய இளைய தலைமுறையினரிடம், விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தின் நோக்கம், வழிபாட்டு முறைகளை பற்றிய போதிய விழிப்புணர்வு இல்லை.இந்த குறையை களையும் விதமாகவே, சென்னை வடபழநி கோவிலில் விநாயகர் சிலைகள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளன.
இலவசமாக வழங்கலாம்: கோவில்களில் பக்தர்களுக்கான வசதிகளை மேம்படுத்தி நிர்வகிப்பது, சொத்துக்களை பாதுகாப்பது என்பதைத் தாண்டி, ஹிந்து தர்மத்தை காப்பதும், அதை ஹிந்துக்களுக்கு எடுத்துரைப்பதும், பாரம்பரியமாக கடைப்பிடித்து வரும் ஹிந்து வழிபாட்டு முறைகளை புதிய தலைமுறையினருக்கு போதிப்பதும், அறநிலையத்துறையின் பொறுப்பு.எனவே, தமிழகம் முழுதும் உள்ள கோவில்களில் விநாயகர் சதுர்த்தியின் போது, பெரிய கோவில்களில் ஆயிரம் சிலைகள் வரை பக்தர்களுக்கு இலவசமாக வழங்கலாம்.ஹிந்துக்களுக்காக இந்த அரசு ஒன்றுமே செய்யவில்லை என்ற சிலரின் குற்றச்சாட்டை, இதுபோன்ற நடவடிக்கைகளின் வாயிலாகவாவது எதிர்கொள்ளலாம். செய்வாரா இத்துறை அமைச்சர் சேகர்பாபு?
- நமது நிருபர் -