மகாளய அமாவாசை வராக நதி, மஞ்சளாறில் பக்தர்கள் நீராடினர்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25செப் 2022 05:09
பெரியகுளம்: பெரியகுளம் வராகநதி, தேவதானப்பட்டி மஞ்சளாற்றில் மகாளய அமாவாசையை யொட்டி முன்னோர்களை நினைத்து ஏராளமான பக்தர்கள் ஆற்றில் குளித்து, சுவாமி தரிசனம் செய்தனர்.
பெரியகுளம் பாலசுப்பிரமணியர் கோயில் ஆயிரம் ஆண்டு பழமையானது. கோயில் அருகே செல்லும் வராகநதி இரு கரையோரங்களிலும் ஆண், பெண் மருத மரங்கள் உள்ளது. உத்திரபிரதேச மாநிலம் காசிக்கு அடுத்தாற்போல் இந்த இரு மரங்களும் நடுவே குளித்தால் புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம். இதனால் ஒவ்வொரு அமாவாசை காலங்களிலும் பெரியகுளம் மற்றும் தேனி மாவட்டங்களில் பல பகுதியிலிருந்து ஏராளமான பக்தர்கள் வராகநதியில் முன்னோர்களை நினைத்து வணங்கி குளித்துவிட்டு கரையோரம் ஐஸ்வர்ய விநாயகரை வணங்கி பாலசுப்பிரமணியர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வர். நேற்று மாகாளய அமாவாசை என்பதால் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இதேபோல் தேவதானப்பட்டி மஞ்சளாற்றில் பக்தர்கள் குளித்துவிட்டு மூங்கிலணை காமாட்சியம்மனை தரிசனம் செய்தனர். குலதெய்வம் வழிபாடு: வீச்சு கருப்பணசுவாமி, சங்கிலி கருப்பண்ணசாமி, சச்சுமடை பாண்டி முனீஸ்வரர் கோயில், மண்டு கருப்பணசாமி உட்பட ஏராளமான கோயில்களில் குலதெய்வம் வழிபாடு நடந்தது.