பதிவு செய்த நாள்
01
ஜன
2023
10:01
திருத்தணி,--திருத்தணி முருகன் கோவிலில், நேற்று, திருப்படித் திருவிழா நேற்று துவங்கியது. விழாவை ஓட்டி, காலை 8:15 மணிக்கு சரவண பொய்கை அருகில் உள்ள மலையடிவாரத்தில், கோவில் தக்கார் ஜெயப்பிரியா, துணை ஆணையர் விஜயா ஆகியோர் முதல் பஜனை குழுவினரை வரவேற்று முதல் படியில் பூஜை செய்தும், படித் திருவிழாவை துவக்கி வைத்தனர்.
பின் கோவில் ஊழியர்கள், 365 படிகளிலும், கற்பூரம் ஏற்றி, தேங்காய் உடைத்து மலைக்கோவிலுக்கு சென்றனர். தொடர்ந்து, பெங்களூரு, சென்னை உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து நுாற்றுக்கணக்கான பஜனை கோஷ்டியினர், ஒவ்வொரு படியிலும் பக்தி பாடல்கள் பாடியவாறு மலைக் கோவிலுக்கு சென்று மூலவரை வழிபட்டனர். மேலும், திரளான பெண் பக்தர்கள் படித் திருவிழாவையொட்டி, ஒவ்வொரு படியில், மஞ்சள் பூசி, குங்குமம் வைத்து, கற்பூரம் ஏற்றி மலைக்கோவிலுக்கு சென்று முருக பெருமானை தரிசித்தனர்.
வெள்ளி மயில் வாகனம்: அதை தொடர்ந்து, காலை 10:00 மணிக்கு, உற்சவர் முருக பெருமான் வள்ளி, தெய்வானையுடன் வெள்ளி மயில் வாகனத்தில் எழுந்தருளி தேர்வீதியில் ஒருமுறை வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மலைக்கோவில் வளாகம், படிகளில் உள்ள மண்டபங்கள், சத்திரங்கள், சன்னிதி தெரு, மடம் கிராமம் ஆகிய இடங்களில் பக்தி இன்னிசை குழுவினர் பக்தி பாடல்கள் இரவு முழுதும் பாடி முருக பெருமானை வழிபட்டனர். இது தவிர, நுாற்றுக்கணக்கான தொண்டு நிறுவனங்கள், ஆன்மிக மன்றங்களால் பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் நீர்மோர் வழங்கினர். முன்னதாக, அதிகாலை 4:00 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, மூலவருக்கு தங்க கிரீடம், தங்கவேல், பச்சை மாணிக்க மரகதக்கல் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு பூஜைகள் நடந்தன. மேலும், வள்ளிமலை சுவாமி சச்சிதானந்தா திருப்புகழ் சபா குழுவின், 104வது படித் திருவிழாவையொட்டி, நகரத்தார் மண்டபத்தில் அன்னதானம் மற்றும் பக்தி கச்சேரி நடந்தது. நள்ளிரவு 12:01 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு, சிறப்பு தீபாராதனை நடந்தது. இதில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, பல மணி நேரம் காத்திருந்து மூலவரை வழிபட்டனர். இன்று, புத்தாண்டு சிறப்பு தரிசனமும், இரவு தங்கத்தேரில் உற்சவர் பெருமான் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். பக்தர்கள் பாதுகாப்பிற்காக திருத்தணி டி.எஸ்.பி., விக்னேஷ் தலைமையில், 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். மேலும், படித்திருவிழா மற்றும் ஆங்கில புத்தாண்டையொட்டி, மலைக்கோவில் வளாகம், தேவஸ்தான விடுதிகள், மலைப்பாதை, சரவண பொய்கை மற்றும் ஆறுமுக சுவாமி கோவில் வளாகம் முழுதும் வண்ண விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தன.