பதிவு செய்த நாள்
28
ஜன
2023
10:32
காரைக்குடி: காரைக்குடியிருந்து, பழநிக்கு செல்லும் நகரத்தார் காவடிகள் நகர்வலம் செல்லும் நிகழ்ச்சி நடந்தது.
ஆண்டுதோறும் தைப்பூசத் திருவிழாவிற்கு நகரத்தார்கள் காவடிகள் ஏந்தி, பழனிக்கு பாதயாத்திரையாக செல்வது வழக்கம். கடந்த 400 ஆண்டுகளாக இதனை பாரம்பரியமாக செய்து வருகின்றனர். காவடிகளுடன் பாதயாத்திரையாக சென்று மீண்டும் பாதயாத்திரையாக திரும்புவர். காரைக்குடி, கண்டனூர், கோட்டையூர், தேவகோட்டை, பலவான்குடி, கொத்தமங்கலம், கல்லல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த நகரத்தார்கள் காவடிகளுடன் பாதயாத்திரையாக குன்றக்குடி வந்தடைவர். குன்றக்குடியில் சிறப்பு பூஜைகளை முடித்து மாட்டு வண்டியில் ரத்தினவேல் முன்னே செல்ல, பக்தர்கள் காவடி ஏந்தி பின்னே பாதயாத்திரையாக செல்வர். வழி நெடுகிலும் சிறப்பு பூஜைகள் நடைபெறும். நேற்று, காரைக்குடி நகரத்தார்கள் சார்பில் 74 காவடிகள் நகர்வலம் செல்லும் நிகழ்ச்சி நடந்தது. இன்று, காரைக்குடி, தேவகோட்டை உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்தும் காவடிகள் குன்றக்குடி புறப்படுகிறது. நாளை குன்றக்குடியில் இருந்து காவடிகள் பழனிக்கு புறப்படும் நிகழ்ச்சி நடைபெறும். பிப்.3 ஆம் தேதி பழனிக்கு காவடிகள் சென்றடையும்.