பழநி: பழநி, தைப்பூச திருவிழா நிறைவு பெற்ற நிலையிலும், வெளியூர் பாதயாத்திரை பக்தர்கள் வருகை மலைக்கோவிலுக்கு அதிகரித்து இருந்தது.
பழநியில் பிப்.7ல் தைப்பூச திருவிழா நிறைவு பெற்றது. வெளியூர், வெளி மாநில பாதயாத்திரை பக்தர்கள் அதிக அளவில் பாதயாத்திரை ஆக வருகை புரிகின்றனர். மலைக்கோயிலில் காலை முதல் வின்ச், ரோப் கார், தரிசன வரிசையிலும் கூட்டம் அதிகளவில் இருந்தது. தரிசன வரிசையில் பக்தர்கள் பல மணிநேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். பழநி மலைக்கோயில் வந்த வெளி மாநில வாகனங்கள் இலவச வாகன நிறுத்துமிடங்கள் நிரம்பியது. வாகனங்கள் போக்குவரத்து அதிகம் இருந்ததால் அடிவாரம், அய்யம்புள்ளி ரோடு, கிரிவிதி பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பழநி, சன்னதி வீதி, கிரிவீதியில் ஆக்கிரமிப்பு கடைகள் அதிகம் உள்ளதால் பக்தர்கள் அதிக சிரமம் அடைந்து வருகின்றனர். கிரிவிதியின் நடுவில் வட மாநிலத்தவர் தட்டு கடைகளை வைத்து பக்தர்களை தொல்லை செய்து வருகின்றனர். அலகு குத்தி, காவடி எடுத்து வந்த பக்தர்கள் சன்னதி வீதி, கிரி வீதியை கடந்த செல்வதில் அவதிப்படுகின்றனர். ஆக்கிரமிப்புகளை கட்டுப்படுத்தவும், போக்குவரத்தை முறைப்படுத்தவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.