பதிவு செய்த நாள்
04
மார்
2023
10:03
பிரதோஷ விரதம் இருந்தால், சிவன் ஜாதக குற்றங்களைப் போக்கி நன்மையளிப்பார். நாம் முற்பிறவிகளில் செய்த பாவங்களினால் எத்தனையோ இன்னல்களுக்கு ஆளாகிறோம். பிரதோஷ விரதம், இவற்றிலிருந்தும் நம்மைக் காக்க வல்லது. பிரதோஷத்தன்று சிவபெருமானை வழிபட்டால் எல்லா குற்றங்களும் பாவங்களும் நீங்கி சகல நன்மைகளும் உண்டாகும்.
சிவன் கோவில்களில் ஒவ்வொரு மாதமும் அமாவாசை, பவுர்ணமி திதி வரும் நிலையில், அதற்கு இரண்டு நாட்களுக்கு முன் திரயோதசி திதி நாளில், பிரதோஷ விழா கொண்டாடுவது வழக்கம். இதில் சனிக்கிழமை நாட்களில் வரும் பிரதோஷ விழா, சிறப்பு வாய்ந்தது. இவ்விழா இன்று, 4ம் தேதி நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு, சுருட்டப்பள்ளி ஸ்ரீசர்வமங்களா சமேத ஸ்ரீபள்ளிகொண்டீஸ்வரர் கோவிலில் மாலை 4:00 மணிக்கு சிவபெருமான், நந்திக்கு பால், தயிர், தேன், மஞ்சள், இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட அபிஷேகப் பொருட்களால் சிறப்பு அபிஷேக, ஆராதனை மற்றும் மகா தீபாராதனை நடக்கும். பின், உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் கோவிலை மூன்று முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இதே போல ஊத்துக்கோட்டை ஸ்ரீஆனந்தவல்லி சமதே திருநீலகண்டேஸ்வரர் கோவில், தாராட்சி ஸ்ரீலோகாம்பிகா சமேத ஸ்ரீபரதீஸ்வரர் கோவில், ஸ்ரீமரகதவல்லி சமேத ஸ்ரீபாபஹஒஸ்வரர் கோவில், ராமலிங்காபுரம் ஸ்ரீராமலிங்கேஸ்வர சுவாமி கோவிலும் சிறப்பு விழா நடக்கிறது. பெரியவண்ணாங்குப்பம் ஆத்மநாதர் கோவில், தேவந்தவாக்கம் ஸ்ரீதேவநாதீஸ்வரர் கோவில், காரணி காரணீஸ்வரர் கோவில், சிறுவாபுரி அகத்தீஸ்வரர் கோவில் உள்ளிட்ட பெரும்பாலான சிவன் கோவில்களில் சனிப்பிரதோஷ விழா நடக்கிறது.