பதிவு செய்த நாள்
05
ஏப்
2023
08:04
பழநி: பழநி பங்குனி உத்திர திருவிழா தேரோட்டத்தில் ஆட்டம் பாட்டம் கொண்டாடித்துடன் பக்தர்கள் பங்கேற்றனர்.
பழநியில் மார்ச்.29 அன்று திருஆவினன்குடி கோயிலில், பங்குனி உத்திர திருவிழா துவங்கியது. வெளி மாநில, வெளி மாவட்ட, பக்தர்கள் அதிகளவில் பழநிக்கு வருகை புரிந்தனர். பாதயாத்திரையாக வந்த பக்தர்கள், காவடியுடன் வருகை புரிந்தனர். லட்சக்கணக்கான பக்தர்கள் அரோகரா கோஷத்துடன் மலைக்கோயில் சுவாமி தரிசனம் செய்தனர். ஈரோடு மாவட்டம் கொடுமுடி தீர்த்த கலசங்களுடன் பாதயாத்திரை ஆக நடந்து வந்தனர். பால்,திருநீறு,இளநீர் காவடிகள் எடுத்துவந்தனர். அலகு குத்தி கிரிவலம் வந்தனர். மேளதாளத்துடன் ஆண் பெண் வித்தியாசம் இன்றி காவடி, கும்மி, கரகாட்டம் ஆடி, பாட்டு பாடினர். பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தி, தீர்த்த குடம் எடுத்து வந்தனர். கிரிவீதி மற்றும் சண்முக நதி பகுதிகளில் பக்தர்கள் அன்னதானம் வழங்கினர் உணவுத்துறை அதிகாரிகள் சில இடங்களில் அன்னதானம் வழங்கிய உணவுகளை ஆய்வு செய்தனர்.
பங்குனி உத்திர திருவிழாவில் மலைக்கோயில் பாரவேல் மண்டபத்தில் பகுதிகளில் பூக்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. பக்தர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் சார்பில் ஒரு வழி பாதையாக பக்தர்கள் திருஆவினன்குடி கோயிலில் இருந்து சன்னதி வீதி, பாத விநாயகர் கோயில், வடக்கு கிரி விதி, குடமுழுக்கு நினைவரங்கு மண்டபம் வழியே யானை பாதை அடைந்து மலைக்கோயில் சென்றனர். பக்தர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த ஆங்காங்கே தடுப்புகள் அமைத்து 1600 போலீசார் பாதுகாப்புடன் குறிப்பிட்ட எண்ணிக்கையில் பக்தர்கள் மலைக்கோயில் அனுப்பினர். தோழி வாகனத்தில் பெண் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். மலைக்கோயிலில் இருந்து படிப்பாதை வழியாக பக்தர்கள் கீழே இறங்க அனுமதிக்கப்பட்டு, பாத விநாயகர் கோயில் மற்றும் அய்யம்புள்ளி ரோடு வழியே பஸ் ஸ்டாண்ட் செல்ல போலீசார் அனுமதித்தனர். பக்தர்கள் நான்கு மணி நேரத்திற்கு மேல் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். மலைக்கோயில் கிரிவீதி , மலைக்கோயிலில் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு இருந்தன. கிரிவீதி பகுதிகளில் ஆம்புலன்ஸ்கள் நிறுத்தப்பட்டு பக்தர்களுக்கு உடல்நலவு குறைவு ஏற்பட்டால் உடனடியாக முதலுதவி வழங்கி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பூங்கா ரோடு, சன்னதி வீதி, அய்யம்புள்ளி ரோடு, ஆகிய பகுதிகளில் கடைக்காரர்கள், தட்டு கடைக்காரர்களின் ஆக்கிரமிப்பு அதிக அளவில் இருந்தது. இதனால் காவடி எடுத்து வந்த பக்தர்கள் மற்றும் அலகு குத்தி வந்த பக்தர்கள் சிரமம் அடைந்தனர்.