பதிவு செய்த நாள்
23
மே
2023
05:05
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் இணை ஆணையரை நியமிக்காமல் தமிழக அரசு இழுத்தடித்து வருகிறது.
ராமேஸ்வரம் கோயிலுக்கு ஓராண்டில் 2 கோடிக்கு மேலான பக்தர்கள் வருகின்றனர். இவர்கள் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தல், கோயில் பூஜைகள், அபிஷேகம், திருவிழாக்கள், கோயில் நிர்வாகத்தை பல ஆண்டுகளாக இணை ஆணையர், தக்கார் கண்காணித்தனர். 2022ல் இக்கோயிலுக்கு துணை ஆணையரை நியமித்து கோயில் நிர்வாக தரத்தை குறைத்தனர். மேலும் ஓராண்டாக தக்கார் நியமிக்காமல் தமிழக அரசு அலட்சியமாக உள்ளது. இதனால் கோயிலில் திட்ட பணிகள், பூஜை, வழிபாடு முறையை கண்காணிக்கவும், நிர்வாக சிக்கல் ஏற்படுகிறது. இச்சூழலில் கடந்த மார்ச்சில் இக்கோயிலுக்கு மீண்டும் இணை ஆணையர் தரத்திற்கு உயர்த்தி அரசு உத்தரவிட்டது. ஆனால் இதுநாள் வரை இணை ஆணையர் நியமிக்கவில்லை. இதற்கு பக்தர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதுகுறித்து வி.எச்.பி., தென் மண்டல அமைப்பாளர் ஆ.சரவணன் கூறுகையில் : ஹிந்து கோயில் வழிபாடு முறையை சீர்குலைக்கவே தமிழக அரசு இக்கோயிலின் நிர்வாக தரத்தை குறைத்து, ஓராண்டாக தக்கார் நியமிக்காமல் உள்ளது. காணிக்கை, தரிசனம் என பக்கரிடம் இருந்து பணம் பறிப்பதே நோக்கமாக உள்ளது. ஆனால் பக்தர்களுக்கு வசதிகள் ஏற்படுத்தவோ, பூஜை, சமய சடங்குகளை பின்பற்றவோ அதிகாரிகள் அக்கறை காட்டுவதில்லை. எனவே இணை ஆணையர், தக்காரை நியமிக்க கோரி ஒரு கோடி பக்தரிடம் கையெழுத்து இயக்கம் நடத்தி கவர்னரிடம் மனு அளிக்க உள்ளோம் என்றார்.