பதிவு செய்த நாள்
11
ஜன
2024
04:01
தொண்டாமுத்தூர்; கோவை ஈஷா யோகா மையத்தில் உள்ள ஆதியோகியை, கடந்த ஆண்டில், மொத்தம் 80 லட்சம் பேர் தரிசித்து சென்றுள்ளனர்.
கோவை மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில், கோவை ஈஷா யோகா மையத்தில் அமைந்துள்ள ஆதியோகி தமிழ்நாட்டின் ஆன்மிக அடையாளங்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது. கோவை ஈஷா யோகா மையத்திற்கு யோகா கற்று கொள்வதற்காக உலகம் முழுவதும் இருந்தும் லட்சக்கணக்கான மக்கள் வருகை தருகின்றனர். கடந்த, 2017ம் ஆண்டு ஆதியோகி சிவன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. அதன்பின், ஈஷாவிற்கு வரும் மக்களின் எண்ணிக்கை பெருமளவு அதிகரித்துள்ளது. மேலும், ஈஷாவிற்கு, சபரிமலைக்கு மாலை அணிந்து செல்லும் பக்தர்களின் வருகையும் ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. குழுவாக வரும் அந்த பக்தர்கள் சமைத்து உண்பதற்கும் வாகனங்கள் நிறுத்துவதற்கும் அருகிலேயே தனியாக வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. ஈஷாவிற்கு வரும் மக்கள் பெரும்பாலும் பஸ், ரயில் மற்றும் விமான போக்குவரத்துகளை பயன்படுத்துகின்றனர். இது கோவையின் சுற்றுலா சார்ந்த போக்குவரத்து துறையின் வருமானத்தில் கணிசமான பங்கு வகிக்கிறது. ஆதியோகிக்கு செல்லும் வழியில் கடைகள் வைத்துள்ள பழங்குடி மக்கள் மற்றும் உள்ளூர் கிராம மக்களின் வருவாய், உள்ளூர் டாக்ஸி டிரைவர்கள், உணவகங்கள், தங்கும் விடுதிகளின் வருவாயும் உயர்ந்துள்ளது. இந்நிலையில், ஈஷா ஆதியோகியை, கடந்த 2023ம் ஆண்டு மட்டும், 80 லட்சம் பேர் நேரில் தரிசனம் செய்துள்ளனர். கடந்த, 2024 ஆங்கில புத்தாண்டு தினத்தில் மட்டும், 1.26 லட்சம் பேர் தரிசனம் செய்தனர் என, ஈஷா நிர்வாகம் தெரிவித்துள்ளது.