36 அடி உயர பஞ்சவடி பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு 2000 லிட்டர் பால் அபிஷேகம்; பக்தர்கள் பரவசம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11ஜன 2024 04:01
புதுச்சேரி : புதுச்சேரி அடுத்த பஞ்சவடீ பஞ்சமுக ஆஞ்ஜநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு 36 அடி உயர பஞ்சமுக ஆஞ்ஜநேயர் சுவாமிக்கு 2000 லிட்டர் பால் அபிஷேகம் நடந்தது.
புதுச்சேரி அடுத்த பஞ்சவடீயில் ஜெயமங்கள பஞ்சமுக ஆஞ்சநேய சுவாமி கோவில் அமைந்துள்ளது. இங்கு ஆஞ்சநேயர் 36 அடி உயர பிரமாண்ட திருமேனியாக அருள் பாலிக்கிறார். ராமாயண காலத்தில் கட்டப்பட்ட பாலத்திற்கு பயன்படுத்திய மிதக்கும் கல்லின் ஒரு பகுதி இக்கோயிலில் தரிசனத்திற்கு வைக்கப்பட்டுள்ளது. பக்தர்களின் தீர்க்க முடியாத குறைகளை தீர்த்து வைக்கும் அருளாற்றல் கொண்டவராக "பஞ்சமுக ஆஞ்சநேயர் விளங்குகிறார். அத்துடன் வெற்றியையும் வளத்தையும் குறிக்கும் வகையில் "ஜய மங்களா என்றும் அழைக்கப்படுகிறார். இக்கோவிலில் பட்டாபிஷேக ராமச்சந்திர மூர்த்தி தனி சன்னதியில் அருள் பாலிக்கிறார். இங்கு இன்று அனுமன் ஜெயந்தி விழா சிறப்பாக நடைபெற்றது. காலை 8:45 மணிக்கு பட்டாபிஷேகம், ராமச்சந்திர மூர்த்திக்கும், மூலவர் 36 அடி உயர பஞ்சமுக ஆஞ்ஜநேயருக்கும் 2 ஆயிரம் லிட்டர் பால் மற்றும் மங்கள திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து சுவாமிக்கு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.