பதிவு செய்த நாள்
02
பிப்
2024
12:02
தஞ்சாவூர்,- பிரசித்தி பெற்ற சரபேஸ்வரர் சிறப்பு ஸ்தலமான திருபுவனம் அறம் வளர்த்த நாயகி அம்பாள் சமேத கம்பகரேஸ்வரர் திருக்கோவில் மகா கும்பாபிஷேக பெருவிழாவில் தருமபுரம் ஆதீனம், தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, சைவ ஆதீனங்கள், துறவியர் பெருமக்கள் உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
பிரசித்தி பெற்ற சரபேஸ்வரர் சிறப்பு ஸ்தலமான திருபுவனம் அருள்மிகு அறம் வளர்த்த நாயகி அம்பாள் சமேத கம்பகரேஸ்வரர் திருக்கோவில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமானது. 3ம் குலோத்துங்க சோழனால் சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பழமையான கோவிலாகும். இக்கோவிலில் சச்சிதானந்த விமானம் உட்பட 4 பெரிய கோபுரங்களை கொண்டது. இக்கோயிலில் கடந்த 2023ம் ஆண்டு மார்ச் 10ம் தேதி, சுமார் 4 கோடி மதிப்பில் திருப்பணி செய்யப்பட்டு மகா கும்பாபிஷேக பெருவிழா, கடந்த ஜன.29ம் தேதி யாக சாலை பூஜைகளுடன் தொடங்கியது.
தருமபுர ஆதீனம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் முன்னிலையில் 51 குண்டங்கள் அமைக்கப்பட்ட யாகசாலையில் 100க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்களுடன், ஓதுவா மூர்த்திகளின் தேவார திருவாசக பதிகங்களுடன் பல்வேறு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து இன்று (பிப்.2ம் தேதி) பிரம்மாண்ட யாகசாலை மண்டபத்தில் 8ம் கால யாக பூஜையில் மகா பூர்ணாஹூதி செய்யப்பட்டு, பூஜிக்கப்பட்ட புனித நீர் கொண்ட கலசங்கள் மங்கள வாத்தியங்கள் முழங்க எடுத்துவரப்பட்டு, தருமபுரம் ஆதீனம் 27வது நட்சத்திர குருமணிகள் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்தர் பரமாச்சாரியார் சுவாமிகள் முன்னிலை மகா கும்பாபிஷேகம் பெருவிழா நடைபெற்றது. கும்பாபிஷேக பெருவிழாவில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி., மதுரை ஆதீனம், செங்கோல் ஆதீனம், சூரியனார் கோயில் ஆதீனம், வேளாக்குறிச்சி ஆதீனம் உள்ளிட்ட சைவ ஆதீனங்கள், குருமகாசந்நிதானங்கள் உட்பட பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். மயிலாடுதுறை மாவட்ட எஸ்பி மீனா தலைமையில் 800க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.