மாசி அமாவாசை : ராமேஸ்வரம் அக்னி தீர்த்தத்தில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடினர்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10மார் 2024 07:03
ராமேஸ்வரம்; மாசி அமாவாசை யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடலில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடினார்கள்.
ராமேஸ்வரம் கோயிலில் மாசி சிவராத்திரி திருவிழா மார்ச் 1ல் கொடி ஏற்றத்துடன் துவங்கியது. 10ம் நாள் திருவிழாவான நேற்று மாசி அமாவாசை யொட்டி தமிழகத்தின் பல பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் ராமேஸ்வரம் கோயிலுக்கு வந்தனர். பக்தர்கள் முதலில் முன்னோர்கள் ஆன்மா சாந்தி அடைய வேண்டி அக்னி தீர்த்த கடற்கரையில் புரோகிதர்கள் மூலம் திதி, தர்ப்பணம் பூஜை செய்தனர். பின் அக்னி தீர்த்த கடலில் சிவசிவ என கோஷமிட்டபடி பக்தர்கள் புனித நீராடினார்கள். இதனைத்தொடர்ந்து கோவில் வளாகத்தில் உள்ள 22 தீர்த்தங்களை பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து புனித நீராடினார்கள். மேலும் கோயிலில் சுவாமி, அம்மன் சன்னதியில் நடந்த சிறப்பு பூஜையில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். கோயிலில் இருந்து மதியம் 2 மணிக்கு தங்க ரிஷப வாகனத்தில் ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்மன், பிரியாவிடை அம்மன் புறப்பாடாகி அக்னி தீர்த்த கடற்கரையில் எழுந்தருளினர். அங்கு சுவாமி, அம்மனுக்கு மகா தீபாரதனை நடந்ததும், பக்தர்களுக்கு தீர்த்தம்வாரி கொடுக்கும் உற்சவம் நடந்தது.