திருப்பதியில் மகாதேவேந்திர சரஸ்வதி சுவாமிகளின் ஆராதனை விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11மார் 2024 12:03
திருப்பதி; ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தின் 67வது பீடாதிபதியான ஜகத்குரு பூஜ்யஸ்ரீ மகாதேவேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் சுவாமிகளின் ஆராதனை திருப்பதி ஸ்ரீமடத்தில் சங்கர விஜயேந்திர சரஸ்வதிகள் முன்னிலையில் நடைபெறுகிறது.
காஞ்சி சங்கராச்சாரியார்களின் பரம்பரையில் அறுபத்தி எட்டாவது பீடாதிபதியான ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளை மகாப் பெரியவா என்று அழைக்கிறோம், நடமாடும் தெய்வமாகவே வாழ்ந்தவர் அவர். அறுபத்தி ஐந்தாவது பீடாதிபதியான ஸ்ரீ மஹாதேவேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய சுவாமிகள் மகா பெரியவாவின் பரமோஷ்டி குரு இவரும் மாபெரும் மகானாக வாழ்ந்தவர். மத்யார்ஜுன சேத்திரம் என அழைக்கப்படும் திருவிடைமருதூர் என்ற ஸ்தலத்தில் இவர் அவதரித்தார். பாரத தேசத்தின் பல பாகங்களிலும் விஜயம் செய்து அருள்பாலித்த சுவாமிகள் இளையாற்றங்குடி என்னும் சேத்திரத்திற்கும் வந்தார். அவரால் இத்தலம் சிறப்புடன் விளங்கியது. இவருக்கு முன் காமகோடி பீடத்தில் பிரகாசித்து வந்த அறுபத்தி நான்கு ஆச்சார்யர்களையும் குறித்த குருபரம்பரா ஸ்தோத்திரத்தை இங்கு இயற்றினார். விரோதி வருஷம் பங்குனி மாதம் எட்டாம் தேதி அமாவாசை (தர்ச தினம்) (20.3.1890) குரு வாரம் கைலாச நாதனுடைய சன்னதியில் அகண்டாகார பிரம்மசைதன்யன் ஆனார். ஒவ்வொரு வருடமும் மாசி அமாவாசை நாளில் மகாதேவேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஆராதனை மிகச் சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதன்படி நேற்று திருப்பதி ஸ்ரீமடத்தில் சங்கர விஜயேந்திர சரஸ்வதிகள் முன்னிலையில் மகாதேவேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் சுவாமிகளுக்கு சிறப்பு ஆராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.