அவிநாசி லிங்கேஸ்வரர் மூலவர் மீது சூரிய ஒளி; தங்கம் போல் ஜொலித்த லிங்கேஸ்வரர்.. பக்தர்கள் பரவசம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12மார் 2024 04:03
அவிநாசி; அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் நேற்று சூரிய ஒளிக்கற்றை பாய்ந்து மூலவர் அவிநாசிலிங்கேஸ்வரர் தங்க கவசத்தினால் போர்த்தியது போன்று ஜொலித்தார். அரோகரா கோஷத்துடன் பக்தர்கள் வழிபட்டனர்.
கொங்கேழு சிவாலயங்களில் முதன்மையான அவிநாசியில் உள்ள கருணாம்பிகையம்மன் உடனமர் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதத்தில் மூலவர் லிங்கத் திருமேனி மீது சூரிய ஒளி பரவும் அதிசயம் நடைபெறுகிறது. இந்த ஆண்டு கடந்த மஹா சிவராத்திரியன்று சில வினாடிகள் சூரிய ஒளிக்கற்றை மூலவர் மீது பட்டு விலகியது. இன்று காலை சரியாக 6:45 மணி அளவில் சூரியன் உதயமானதும் படிப்படியாக மூலவர் திருமேனி மீது சூரிய கதிர்கள் பரவத் தொடங்கியது. பின்னர் சூரிய ஒளிக்கற்றை முழுவதுமாக பரவி தங்க கவசம் போர்த்தியது போன்று பொன்னாக மின்னிய அவிநாசியப்பரை தரிசித்த பக்தர்கள் அரோகரா அரோகரா அவிநாசியப்பா என கோஷமிட்டனர்.
இது குறித்து சிவாச்சாரியார்கள் கூறுகையில், மஹா சிவராத்திரி பிறகு மாசி மாதம் இறுதியில் அல்லது பங்குனி முதல் வாரத்தில் மூன்று முதல் ஐந்து நாட்கள் மூலவரான அவிநாசி லிங்கேஸ்வரர் திருமேனி மீது சூரிய ஒளிக்கதிர்கள் விழும் அதிசயம் நடைபெற்று வருகிறது. இந்த நாட்களில் மூலவரை வணங்குவது மிகவும் சிறந்தது. நவகிரக தோஷங்கள் விலகி சுபிட்சம் உண்டாகும். சூரிய ஒளிக் கதிர்கள் பரவும் படி நம் முன்னோர்கள் அவிநாசி கோவிலை மிக நேர்த்தியாக செதுக்கியுள்ளனர் என்றனர்.