மேல்மலையனுார் அங்காளம்மன் தேரோட்டம் கோலாகலம்; குவிந்த பக்தர்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14மார் 2024 03:03
செஞ்சி; மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் தேர்திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனுார் அங்காளம்மன் கோவில் மாசி திருவிழா கடந்த 8 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 9ம் தேதி மயானக்கொள்ளையும், 12ம் தேதி தீமிதி விழாவும் நடந்தது. இன்று மாலை 3.00 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நடக்க உள்ளது. மேல்மலையனுார் அங்காளம்மன் கோவில் ஸ்தல புராணத்தின் படி மயானக்கொள்ளையன்று விஸ்வரூபாம் எடுக்கும் அங்காளம்மனை சாந்தப்படுத்த தேவர்கள் அனைவரும் தேரின் பாகங்களாக இருந்து அம்மனுக்கு தேர் திருவிழா நடத்துகின்றனர். இந்த பாரம்பரியத்தின் படி ஒவ்வொரு ஆண்டும் புதிய தேர் வடிவமைத்து தேர் திருவிழா நடத்தி வருகின்றனர். இந்த ஆண்டு விழாவிற்காக கடந்த ஒரு மாதம் முன்பு பச்சை மரங்களை கொண்டு புதிய தேர் கட்டும் பணி துவங்கி நடந்து வந்தது. இன்று இறுதி கட்ட அலங்காரம் செய்து சாந்த கோலத்தில் உள்ள அம்மனை தேரில் ஏற்றி மாட வீதிகள் வழியாக திருத்தேர் உறசவம் துவங்கியது. ஏராளமான பக்தர்கள் வடம் பிடிக்க அம்மன் தேர் அசைந்தாடி வருகிறது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்து வருகின்றனர். விழா ஏற்பாடுகளை ஹிந்து சமய அறநிலையத்துறை மற்றும் அறங்காவலர்கள் செய்திருந்தனர்.