விண்ணகரம் கோவிலுக்கு நிலக்கொடை வழங்கிய சோழர் கால கல்வெட்டு கண்டெடுப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12ஏப் 2024 11:04
தஞ்சாவூர்:சரஸ்வதி மஹால் நுாலகத் தமிழ்ப்பண்டிதரும், வரலாற்று ஆய்வாளருமான மணிமாறன் கூறியதாவது: முதலாம் ஆதித்த சோழனின் பட்டப்பெயர் ராசகேசரி. இம்மன்னன் பெயரால் ராசகேசரி சதுர்வேதிமங்கலம் என அழைக்கப்பட்ட ஊர், காலப்போக்கில் ராஜகிரி என மாறியது. இப்பகுதியில் உள்ள தர்மராஜ் என்பவரின் வயலுக்கு தண்ணீர் செல்லும் கால்வாயில் கிடந்த நான்கு துண்டு கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இக்கல்வெட்டுகள், சோழர் கால எழுத்தமைப்புடன் காணப்படுகின்றன. நான்கு துண்டு கல்வெட்டுகளும் ஒன்றுடன் ஒன்று தொடர்பு அற்றவையாகக் காணப்படுவதோடு, முழுமையாகவும் இல்லை. இக்கல்வெட்டுகளில், ராஜேந்திர சோழன் விண்ணகரம் என்ற கோவிலுக்கு நிலக்கொடை வழங்கியதைப் பற்றியும், மங்கலம், பிறவிகலாஞ்சேரி, கலாகரச்சேரி போன்ற இடங்களின் பெயர்களும் காணப்படுகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.