பதிவு செய்த நாள்
12
ஏப்
2024
11:04
மாமல்லபுரம்: திருவண்ணாமலை கிரிவல பாதை கோவிலில் பிரதிஷ்டை செய்ய, 15 அடி உயர பிரமாண்ட பாலமுருகன் சிலை, மாமல்லபுரம் சிற்பக்கூடத்திலிருந்து,அனுப்பி வைக்கப்பட்டது.
ஹிந்து சமய அறநிலையத் துறையின் கீழ், திருவண்ணாமலையில் அருணாச்சலேஸ்வரர் கோவில் உள்ளது. அங்கு 16 கி.மீ., சுற்றளவு மலைக்குன்றின் அடிவாரத்தில் கோவில் உள்ளது. இங்கு, பவுர்ணமி நாளில், பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர். இப்பாதையில், பல்வேறு ஆசிரமங்கள், கோவில்கள் ஆகியவையும் உள்ளன. இந்நிலையில், விழுப்புரம் அருகே சாமியார் ஒருவர், கிரிவல பாதை பகுதியில், புதிய பாலமுருகன் கோவிலை நிர்மாணிக்க உள்ளார். அதில், பிரதிஷ்டை செய்யப்படவுள்ள பிரமாண்ட நின்றகோல பாலமுருகன் கற்சிலை, மாமல்லபுரம் தனியார் சிற்பக் கூடத்தில் வடிக்கப்பட்டது. மயில், பாம்பு ஆகியவற்றுடன், 15 அடி உயரம், 8 அடி அகலத்தில் முருகன் சிலையை சிற்பிகள் வடித்துள்ளனர். அதற்கு, 3 அடி உயர பீடமும் உள்ளது. நேற்று சிறப்பு வழிபாடு நடத்தி, வாகனம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து, சிற்பக்கூட உரிமையாளர் அரவிந்த் கூறியதாவது: ஹைதராபாத் பகுதியில் உள்ள பாறையிலிருந்து, 50 டன் கல் கொண்டு வந்தோம். சிலையை, 25 டன் எடையில் செதுக்கியுள்ளோம். விழுப்புரம் அருகில் உள்ள சாமியார் ஒருவரின் கோவிலில், சிலைக்கு 48 நாட்கள் சிறப்பு பூஜை நடத்துவர். அதன்பின், திருவண்ணாமலை கிரிவல பாதையில் அமைக்கப்படும் கோவிலில் பிரதிஷ்டை செய்யப்படும். முருகனுக்கு அதிகபட்ச உயரத்தில் செய்த சிலையாக, இந்த முருகன் சிலை இருக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.