பதிவு செய்த நாள்
29
ஏப்
2024
05:04
போத்தனூர்; கோவைபுதூரிலுள்ள பத்ரகாளியம்மன், கருப்பராயர், குருசக்திநாதர் கோவில் குண்டம் விழாவில், பக்தர்கள் பக்தி பரவசத்துடன் குண்டம் இறங்கினர்.
கோவைபுதூர், என் பிளாக்கிலுள்ள கோவிலின், 15ம் ஆண்டு சித்திரை குண்டம் திருவிழா கடந்த, 22ல், கணபதி ஹோமத்துடன் துவங்கியது. தொடர்ந்து சப்த கன்னி பூஜை, கோ பூஜை, நாக பிள்ளையார் கோவிலில் இருந்து அம்மன் திருவீதி உலா, கொடியேற்றம், காப்பு கட்டுதல் நடந்தன. இரண்டாம் நாள் ஸ்ரீ சக்ர பூஜை, மூன்றாம் நாள் சண்டி பூஜை, ஹோமம், நான்காம் நாள் குருதி பூஜை, ஐந்தாம் நாள் குண்டம் திறத்தல், ஆறாம் நாள் நாகபிள்ளையார் கோவிலில் இருந்து அம்மன் திருவீதி உலா, பட்டு, படைக்கலன், தீர்த்தக்குடம் கோவிலுக்கு எடுத்து வருதல் நடந்தன. நேற்று அதிகாலை அம்மனுக்கு அபிஷேகம், அலங்காரமும் தொடர்ந்து கோவிலிலிருந்து அம்மன் தண்டத்திற்கு புறப்பாடு, பூஜை, பிரசாதம் வழங்குதல் நடந்தன. மேலும் முக்கிய நிகழ்வான குண்டம் இறங்குதலுக்காக பூ வளர்த்தல் நடந்தது. மதியம் உச்சி பூஜை, அன்னதானம் நடந்தன. மாலை சக்தி கரகம் கோவிலுக்கு அழைத்து வரப்பட்டது. இதையடுத்து குருசாமி முதலில் குண்டத்தில் இறங்கினார். பின், சக்தி கரகங்கள், காவடி எடுத்தோரும் அடுத்து வேண்டுதலுக்காக ஆண்கள், பெண்கள் குண்டம் இறங்கினர். திரளான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் கண்டுகளித்தனர். இன்று காலை மகா அபிஷேகம், அலங்கார பூஜை, பொங்கல் வைத்தல் மதியம் உச்சி பூஜை, கருப்பராயர் காவடி எடுத்து விளையாடுதல், மாலை மாவிளக்கு வழிபாடும் தொடர்ந்து மஞ்சள் நீராட்டும் நடந்தன. பின் கரகம் கரைத்தல், மகா தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் நடந்தன. இதையடுத்து கோவில் நடை அடைக்கப்பட்டு விழா நிறைவடைந்தது.